டாக்கா திரைப்பட விழாவில் விருது வென்ற வன்னி எலிகள்!

வங்கதேச தலைநகர் டாக்காவில் சௌகத் உஸ்மான் லைப்ரரி அரங்கில் 11வது சர்வதேச குறும்படம் மற்றும் சுதந்திர ஊடகத்துக்கான விழா நடந்தது. இதில் வன்னி எலிகள் என்ற ஈழக் குறும் படமும் பங்கேற்றது.
வன்னிக் காடுகளில் வசிக்கும் இணைபிரியாத இரண்டு எலிகள், மூன்று லட்சம் மக்களை அடைத்து வைத்திருக்கும் வவுனியா வதை முகாம்களுக்குள் யதேச்சையாக செல்கின்றன. முள்வேலிக்குப் பின்னால் அடைக்கப்பட்ட அந்த அப்பாவி தமிழர்கள் படும் சொல்லொனாத் துயரங்களுக்கு மவுன சாட்சியாக நிற்கின்றன அந்த எலிகள்.
வெளியில் சொல்ல முடியாத, யாரும் அத்தனை சுலபத்தில் அறிந்து கொள்ளவும் முடியாத அந்த துயரக் காட்சிகளை காணச் சகிக்காத அந்த எலிகள் அங்கிருந்து எப்படித் தப்பித்தன என்பது 'க்ளைமாக்ஸ்'.
தமிழியம் சுபாஷ் எனற 26 வயது ஈழத் தமிழரால் உருவாக்கப்பட்ட படம் இது. ஏற்கெனவே சென்னையில் நடந்த பெரியார் குறும்பட விழாவில் வன்னி எலிகளுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
கடந்த மாதம் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் குறும் படத்துக்கான சிறப்பு விருதினை இந்தப் படம் வென்றது.
சர்வதேச அளவில் குறும்படத்துக்காக விருது வென்ற முதல் ஈழக் கலைஞரின் படம் வன்னி எலிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாத இறுதியில் பாரிசில் நடக்கும் ஐரோப்பிய குறும்பட (டிராமா பிரிவு) விழாவில் பங்கேற்கவும் இந்தப் படம் தகுதி பெற்றுள்ளது.
வன்னி எலிகளுக்குப் பிறகு 'Can I have a Dream?' என்ற குறும் படத்தை இயக்கி வெளியிடுகிறார் சுபாஷ்.


Click it and Unblock the Notifications











