குடியரசுத் தலைவரிடம் 'பத்ம' விருது பெற்ற எஸ்.பி.பி, ஜெயராம், தபு!
டெல்லி: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணுக்கு பத்மபூஷன் விருதையும், நடிகர் ஜெயராம், நடிகை தபு, கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதையும் வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் அசோகா மண்டபத்தில், பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் இந்த விருதுகளை வழங்கினார்.
துணை குடியரசுத் தலைவர் அமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை, முன்னாள் கவர்னர் ஏ.ஆ.கித்வாய், இலக்கியவாதி ஓ.என்.வி.குருப், வாஜ்பாய் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா, மூத்த அறிஞர் கபிலா வாத்சயன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்.
எஸ்.பி.பி.க்கு விருது
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இந்தி நடிகை வஹீதா ரகுமான், மூத்த விஞ்ஞானி எஸ்.ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கய்யாம் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருது பெற்றனர்.
பத்மஸ்ரீ
நடிகர் ஜெயராம், நடிகை தபு, கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண், விண்வெளி விஞ்ஞானி எம்.அண்ணாமலை, பளுதூக்கும் வீராங்கனை குஞ்சாராணி தேவி, பரத நாட்டிய குரு எம்.கே.சரோஜா, இந்தியாவில் சோதனைக்குழாய் குழந்தை உருவாக்கத்தில் முன்னோடியான மகப்பேறு நிபுணர் இந்திரா ஹிந்துஜா உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.


Click it and Unblock the Notifications











