வலது கையில் கலைமாமணி விருது.. இடது கையில் விலைமதிப்பில்லா விருது.. அசத்திட்டீங்க போங்க சித்தப்பு!
நடிகர் சரவணனுக்கு தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
சென்னை: தமிழக அரசின் சார்பில் நடிகர் சரவணனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருதுகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து நேற்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். நடிகர்கள் கார்த்தி, சசிகுமார், இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, நடிகை நளினி உள்ளிட்டோர் முதலமைச்சரிடம் இருந்து விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

சரவணனுக்கு விருது:
அதேபோல் நடிகர் சரவணனுக்கும் கலைமாமணி விருதினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சரவணன் தனது குடும்பத்துடன் இந்த விழாவுக்கு வந்திருந்தார். தனது குழந்தையை ஒரு கையில் ஏந்தியபடி அவர் கலைமாமணி விருதை முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

முதல் படம்:
வைதேகி வந்தாச்சு படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சரவணன். பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த அவர், பிறகு மார்கெட் சரிந்ததால் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க முடியாமல் போனது.

சித்தப்பு:
கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கிய பருத்தி வீரன் படம் சரவணணின் திரைவாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு, பருத்திவீரன் சரவணன் எனும் அடைமொழியுடனே அழைக்கப்படுகிறார். அதோடு, அப்படத்தில் கார்த்தி கூப்பிடுவது போலவே அனைவரும் அவரை சித்தப்பு என செல்லமாக அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

பிக் பாஸ் சர்ச்சை:
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3ல் சரவணன் கலந்துகொண்டார். சக போட்டியாளர்களும் அவரை சித்தப்பு என்றே பாசமாக அழைத்தனர். இந்த நிகழ்ச்சில் ஒருநாள் கமலிடம் பேசும் போது, தன்னுடைய சிறு வயதில் பெண்களை உரசுவதற்காக பேருந்தில் சென்றதாக சரவணன் கூறினார். இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதமாக மாறியது.

அதிரடி வெளியேற்றம்:
இதையடுத்து சரவணன் மன்னிப்பு கேட்டும், அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். கமலை ஒருமையில் பேசியது, சேரனுடன் சண்டை போட்டது என பிக் பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை நாயகனாக சரவணன் இருந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.

முதல் பொது நிகழ்ச்சி:
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுவிட்டார் சரவணன். பல ஊடகங்கள் எத்தனைமுறை கேட்டும் அவர் பேட்டி கொடுக்கவில்லை. அந்த நிகழ்விற்கு பிறகு தற்போது தான் சரவணன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











