‘பாலிவுட்டின் முடிசூடா மன்னன்’ நடிகர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!
டெல்லி: மூத்த பாலிவுட் நடிகரான சசிகபூருக்கு திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
பாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய சசிகபூர், 1938ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். தனது நான்கு வயது முதலே நடிக்கத் தொடங்கிய சசிகபூர், இதுவரை 160க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமின்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத் துறையில் தன் பன்முகத்திறமைகளோடு ஜொலித்தவர் சசிகபூர். இந்தி படங்கள் மட்டுமல்லாது ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார் இவர்.
1979ம் ஆண்டு வெளியான ஜூனூன் படத்திற்கு சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்ற சசிகபூர், 1986ம் ஆண்டு நியூ டெல்லி டைம்ஸ் படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். இதேபோல், 1993ம் ஆண்டு முஹாபிஜ் படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி பிரிவு விருதும் இவருக்குக் கிடைத்தது.
இவரது சாதனையைப் பாராட்டி, 2010ம் ஆண்டில் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு சசிகபூருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது. இந்நிலையில், தற்போது திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது சசிகபூருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











