twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'வியன் கலை வித்தகர்’ - நடிகர் அரவிந்த்சாமிக்கு ஃபெட்னா 2016 விருது

    By Shankar
    |

    ட்ரென்டென்(யு.எஸ்): வட அமெரிக்க தமிழர் பேரவை(ஃபெட்னா) தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அரவிந்த்சாமிக்கு வியன்கலை வித்தகர் விருது வழங்கப்பட்டது.

    ஃபெட்னா 2016 தமிழ் விழாவில், தொழிலதிபரும் நடிகருமான அரவிந்த்சாமி, தமிழ் தொழில்முனைவோர் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டார்.

    மாலையில் பார்வையாளர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடைபெற்றது. நெறியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அரவிந்தசாமி பதிலளித்தார்.. இடையே இருவர் படத்தில் இடம்பெற்ற ‘உன்னோடு இருந்த ஒவ்வொரு மணித்துளியும்...' வசன பாடலை பாடினார்.

     பாக்கெட் மணிக்கு மாடலிங்

    பாக்கெட் மணிக்கு மாடலிங்

    தொழிலதிபரின் மகனான நீங்கள் எப்படி திரைத்துறைக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு, நடிக்கும் எண்ணம் ஒரு போதும் இருந்ததில்லை. கல்லூரி காலத்தில் தந்தை ஒரு நாளைக்கு பத்து ரூபாய் பாகெட் மணி தருவார். எட்டரை ரூபாய் பெட்ரோலுக்கே செலவாகிவிடும்.

    அதற்கு மேலான தேவைகளுக்கு, பையன் அவனே சம்பாதித்துக் கொள்ளட்டும் என்பது அப்பாவின் எண்ணம். அதனால் பாக்கெட் மணி தேவைக்காக மாடலிங் செய்தேன். அதைப் பார்த்த மணிரத்னம் அழைத்து இருந்தார். என்ன படம் என்றெல்லாம் தெரியாது. ஆனால் அப்போது தளபதி சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

     இறங்கி வந்து வரவேற்ற ரஜினி

    இறங்கி வந்து வரவேற்ற ரஜினி

    உனக்கு திரைப்படம் எடுப்பது பற்றி தெரியாததால், சில நாட்கள் சூட்டிங் இடத்திற்கு வந்து தெரிந்து கொள் என்று மணிரத்னம் சொன்னார்.

    நான் சென்ற போது, நாலாயிரம் பேர் பின்ணணியில் , ரோட்டில் தூரத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. என்னிடம் 'சார்... உங்களை பார்க்கணும்' என்று அந்த காரைக் காட்டி சொன்னார்கள். சரி, யாரோ அழைக்கிறார்கள் என்று அருகில் சென்றேன். அங்கே ரஜினி சார், கார் கதவை திறந்து இறங்கி வந்து. வாழ்த்துகள், உங்களிடம் இணைந்து பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சி என்றார்.

    தளபதி தான் நான் நடிக்கபோகும் முதல் படம் என்று என்னால் நம்ப முடியவில்லை. கலெக்டர் ஆபீஸ் காட்சி தான் முதலில் எடுத்தோம். ரஜினி சார் மிகவும் ஊக்கப்படுத்தினார்.

     7 வருடம் தமிழ்ப் படம் பார்க்கவில்லை

    7 வருடம் தமிழ்ப் படம் பார்க்கவில்லை

    திரைப்படங்களில் நடிப்பதற்கு இடையில் நிறைய இடைவெளி விட்டு விட்டீர்களே என்று கேட்டபோது. அது நானாக எடுத்துக் கொண்ட முடிவுதான். திடீரென்று கிடைத்த புகழை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, அதை சரியாக சமாளிக்க முடியாமல் தடுமாறினேன்.

    தந்தையின் மறைவுக்கு பின், தொழிலிலும், திரைப்படத்திலும் என்னால் ஒரே நேரத்தில் பணியாற்ற முடியவில்லை.

    ஆகவே தொழிலில் கவனம் செலுத்தி, பல புதிய தொழில்களையும் தொடங்கினேன். எங்கே மீண்டும் நடிக்கப் போய்விடுவோனோ என்று எண்ணி, 7 வருடங்கள் தமிழ்ப் படங்களைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன்.

     தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கை

    இடையில் ஏற்பட்ட விபத்தில் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, ஒராண்டுக்கும் மேலாக
    படுக்கையிலே இருந்தேன். அறுவை சிகிச்சை செய்வதில்லை என்று பிடிவாதமாக இருந்து ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன். உட்கார்ந்து எந்திருக்கக் கூடாத முடியாத நிலையில் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

    எனக்கு ஏன் நடந்தது, அந்த விபத்து நடக்காமிலிருந்தால்... போன்ற கேள்விகளைத் தவிர்த்து, விபத்து நடந்து விட்டது, அடுத்து என்ன என்று மட்டுமே சிந்தித்தேன். மனச்சோர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்று, நிறைய படிக்க ஆரம்பித்தேன். GMAT முதல் என்னுடைய குழந்தைகள் புத்தகங்கள் வரை ஏராளமாக படித்து எனக்கு வேறு சிந்தனைகள் வராமல் பார்த்து கொண்டேன்.

    எப்படியும் மீண்டு வருவேன் என்று நம்பினேன்.

     எப்படி இருந்த அரவிந்த்சாமி இப்படியா?

    எப்படி இருந்த அரவிந்த்சாமி இப்படியா?

    முதுகுதண்டுவடம் சரியாக வருவதற்குள், ஏகப்பட்ட மருந்துகள் உட்கொண்டு 108 கிலோ எடைக்கு கூடி விட்டேன். முடி உதிர ஆரம்பித்தது. அவ்வப்போது பள்ளிக்கு பிள்ளைகளை விடச் செல்லும் போது யாரோ புகைப்படம் எடுத்து 'எப்படி இருந்த அரவிந்த்சாமி இப்படி ஆயிட்டான் பார்த்தியா' என்று இன்டெர்நெட்டில் கேலி செய்தார்கள்.

    நான் யாரிடமும் என்னுடைய உடல் நலத்தைப் பற்றி சொல்லி ஏதும் கேட்கவில்லை. அவர்கள் கண்ணோட்டத்தில் அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். ஆனாலும் அதையே ஒரு சவாலாக எடுத்து கடும் உடற்பயிற்சி செய்து 80 கிலோவாக எடையைக் குறைத்தேன்.

    மீண்டும் அந்த இடைக்கால படத்தைப் போட்டு, எப்படி மாறிட்டான் அரவிந்த்சாமி என்று சொல்லட்டும் என்று மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்தேன்.

     கார்ப்பரேஷன் பள்ளிகளுக்கு கழிப்பறை

    கார்ப்பரேஷன் பள்ளிகளுக்கு கழிப்பறை

    அரவிந்த்சாமி செய்து வரும் அறப்பணிகள் பற்றி நெறியாளார்கள் கேட்ட போது,

    எல்லாவற்றையும் விட கார்ப்பரேஷன் மற்றும் அரசுப் பள்ளிகளில் பெண்களுக்கான கழிப்பறை இல்லாததால், படிப்பை நிறுத்திவிடுவதை அறிந்தோம். ஆகையால் அங்கு சுத்தமான கழிப்பறை கட்டிக்கொடுக்கும் பணியை செய்யும் போது மிகுந்த மனை நிறைவு அடைந்தேன். கடந்த ஆண்டு 110 பள்ளிகளில் பெண்கள் கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ளோம் என்றார்.

    பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், விழா ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சுந்தரம்,
    பொருளாளர் பிருத்வி ராஜ் , பொன்னாடை அணிவித்து 'வியன்கலை வித்தகர்; என்ற பட்டத்தை வழங்கினார்கள் .

    முன்னதாக நியூஜெர்ஸி தமிழ்ச் சங்க தலைவர் உஷா கிருஷ்ணகுமார் வரவேற்றுப் பேசுகையில், சைமா அவார்டு விழாவுக்குக் கூடப் போகாமல், ஃபெட்னா விழாவுக்கு அரவிந்த்சாமி வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

    சுமார் ஒராண்டுக்கு முன்னதாகவே ஃபெட்னாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு தனி ஒருவன் ஹிட் ஆனது விஜய் டிவியில் கோடீஸ்வரர் நிகழ்ச்சி வந்தது. சைமா அவார்டும் வந்தது. ஆனாலும் கொடுத்த வாக்கை காப்பாற்றி ஃபெட்னாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றார்.

    - ஃபெட்னா அரங்கிலிருந்து இர தினகர்.

    English summary
    Actor Arvindswamy has skipped SIIMA award show for FeTNA Tamil festival held in USA.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X