படபடத்த செர்னோபில்.. கலக்கிய ஜிஓடி.. ஷாக் தந்த மினி சீரிஸ்.. எம்மி விருது விழாவில் என்ன நடந்தது?
லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவில் நடைபெற்ற எம்மி விருதுகள் 2019 விழாவில் எல்லோரும் எதிர்பார்த்த 3 சீரியல்கள் விருதுகளை அள்ளி குவித்துள்ளது.
தொலைக்காட்சி உலகின் மிகப்பெரிய விருது வழங்கும் நிகழ்ச்சியான எம்மி விருதுகள் 2019 இந்த வருடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. நேற்று இரவு நடந்த அந்த விழா தற்போது தொலைக்காட்சி உலகையே உலுக்கி உள்ளது.
தற்போது இந்தியாவில் நெட்பிளிக்ஸ், எச்பிஓ, ஹாட்ஸ்டார், அமேசான் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், இந்த விருது வழங்கும் விழா இந்தியாவில் பெரிய கவனம் ஈர்த்தது. அதிலும் மூன்று முக்கிய சீரியல்கள் இந்த விழாவில் அதிகம் கவனம் ஈர்த்தது.

எப்படி
கடந்த வருடம் முழுக்க சீரியல் உலகிற்கு பொன்னான வருடம் என்று கூட கூறலாம். அதற்கு ஏற்றபடி இந்த விருது வழங்கும் விழாவில் எச்பிஓ நிறுவனம் மற்ற அனைத்து நிறுவனங்களை விட அதிக விருதுகளை வென்றது. அதிலும் இந்திய மக்கள் எதிர்பார்த்து காத்து இருந்த, இந்தியாவில் வைரலான மூன்று சீரியல்கள் விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

விருது என்ன
இந்த விழாவில் இந்தியர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது செர்னோபில் சீரியல் குறித்துதான் இருக்கும். 1986 ஏப்ரல் மாதம் 26ம் தேதி ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய அணு உலைகளில் ஒன்றாக செர்னோபில் அணு உலையில் ஒரு ரியாக்டர் கோர் வெடித்து சிதறியது. ரஷ்யா பல வருடங்களாக எல்லா அணு உலைகளிலும் கவனிக்க தவறிய மிக முக்கியமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து
செர்னோபில் விபத்து ஏற்பட்டதால் தற்போது அந்த நகரமே மக்கள் பயன்படுத்துவதற்கு தகாத நகரமாக மாறியது. அங்கு இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட நாய் உட்பட அனைத்து உயிரினங்களும் அங்கு கொல்லப்பட்டுள்ளது. இன்னும் அங்கு அணு கதிர் வீச்சு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த கதை
இதை மையமாக வைத்து வெளியான சிறிய சீரியல்தான் செர்னோபில். எச்பிஓவில் வெளியான இந்த சீரியல் தற்போது 3 எம்மி விருதுகளை வாங்கி குவித்துள்ளது. அதன்படி மிக சிறந்த குறுகிய சீரியல் (Emmy for Outstanding Limited Series), மிக சிறந்த திரைக்கதை கொண்ட குறுகிய சீரியல், மிக சிறந்த இயக்கம் கொண்ட குறுகிய சீரியல் ஆகிய விருதுகளை பெற்றுள்ளது.

அடுத்த விருது
அதேபோல் இந்தியாவை உலுக்கிய இன்னொரு சீரியலான வென் தெய் சீ அஸ் (When They See Us), முக்கியமான எம்மி விருது ஒன்றை வாங்கியுள்ளது.1990ல் அமெரிக்காவில் உள்ள சென்டரல் பார்க் என்ற இடத்தில் நடந்த பெண் பாலியல் கொலை வழக்கு ஒன்று உலகம் முழுக்க பிரபலம். இந்த வழக்கில் தவறு செய்யாத ''5 கறுப்பின சிறுவர்கள்'' கைது செய்யப்பட்டு, குற்றவாளிகள் என்று ஜோடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மிக மோசம்
இவர்கள் சிறையில் செய்யாத தவறுக்காக மிக மோசமாக கொடுமைகளை அனுபவிப்பார்கள். இவர்கள் வாழ்க்கையே இதனால் நாசம் ஆகும். 10-12 வருடங்களுக்கு பின் இவர்கள் குற்றமே செய்யவில்லை என்று நிரூபணம் ஆகும்.

உண்மை என்ன
உண்மையான குற்றவாளி கைது செய்யப்படுவான். ஆனால் இவர்கள் 5 பேரும் தொலைத்த அந்த இளம் வயது அதன்பின் மீண்டும் வரவே இல்லை. இந்த நிலையில் இந்த மிகவும் உணர்ச்சிகரமான குறுகிய சீரியசுக்காக மிக சிறந்த நடிகர் விருதை ஜரால் ஜெரோம் வாங்கி இருக்கிறார்.

சிறப்பு விருது
அதேபோல் எல்லோரும் எதிர்பார்த்த, உலகே உற்றுநோக்கிய இன்னொரு தொடரான கேம் ஆப் திரோன்ஸ் சீரியலும் இரண்டு முக்கியமான விருதுகளை வென்றுள்ளது. உலகில் அதிக நபர்களால் பார்க்கப்பட்ட சீரியல் என்ற சிறப்பை கேம் ஆப் திரோன்ஸ் பெற்றுள்ளது. வரலாறு, திரில்லர், 18+, போர், திருப்பம், மன்னர் கதை என்று பல விஷயங்களை கேம் ஆப் திரோன்ஸ் உள்ளடக்கியது.

எத்தனை வாங்கியது
மொத்தம் 8 சீசன் கொண்ட இந்த சீரியல் மிக சிறந்த சீரியலுக்கான எம்மி விருதை வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளது. அதேபோல் இந்த சீரியலில் நடித்த பிரபல நடிகர் பீட்டர் டிங்க்லாக் மிக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். இவர் நான்காவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











