நேர்மையாளர்களுக்கு ஏற்ற தொழில் சினிமாதான்!- கமல் ஹாஸன்
சென்னை: நேர்மையாளர்களுக்கு ஏற்ற தொழில் சினிமாதான் என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார்.
சினிமா மக்கள் தொடர்பாளர்கள் சங்கம் மற்றும் ‘வி4' அமைப்பு சார்பில் கடந்தாண்டு வெளியான சிறந்த படங்கள் மற்றும் சிறந்த நடிகர்கள்-இயக்குநர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் நடந்தது.
விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை கமல் ஹாசனுக்கு பட அதிபர் ஏவி.எம்.சரவணன் வழங்கினார். நடிகர்கள் அரவிந்தசாமி, அருண்விஜய், இயக்குநர்கள் சுந்தர்.சி., மணிகண்டன், விக்னேஷ் சிவன், பிரம்மா, ராஜேஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:
பள்ளிக்கு போகாத நான், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் செல்கிறேன். சினிமாவில் நடித்த எனக்கு ஏவி.எம். நிறுவனம் ஒரு முக்கியமான பள்ளிக்கூடமாக அமைந்தது. ‘களத்தூர் கண்ணம்மா' படத்தில் 3 வயது சிறுவனாக அறிமுகமானேன். என்னை ஏவி.எம். ஒரு பிள்ளையாகவே பார்த்துக்கொண்டது.
சினிமா என்பது மிகவும் நல்ல தொழில். சிலர் இந்த தொழிலுக்கு தங்கள் பிள்ளைகள் வரக்கூடாது என்று நினைத்தால் அதை மறுக்க நான் கடமைப்பட்டு உள்ளேன். சினிமாவில் நேர்மையாக தொழில் செய்பவர்கள், தங்கள் குழந்தைகளை இந்த தொழிலில் இறக்கி விடுகிறார்கள். தவறு செய்பவர்கள்தான் தங்கள் பிள்ளைகள் சினிமா தொழிலுக்கு வரக்கூடாது என்று நினைப்பார்கள். நேர்மையாக இருப்பவர்களுக்கு சினிமா ஒரு நல்ல தொழில்.

திறமையான டைரக்டர்கள் பலர் இப்போது வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்களை விட அதிகமாக ஓடவேண்டும். அப்படி ஓடுவதுதான் எங்கள் வியர்வைக்கு அளிக்கும் மரியாதை. முன்பெல்லாம் சினிமாவில் ஒத்திகை பார்த்துத்தான் நடிப்போம்.
‘தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் நடிப்பு-சண்டை போன்றவற்றை ஒத்திகை எடுத்தோம். அது இப்போதும் தொடர்கிறது. ஒத்திகை என்பது எல்லா தொழிலுக்கும் அவசியம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.


Click it and Unblock the Notifications











