ஜெய் ஹோ... இந்திப்பட பாடலாசிரியர் குல்சாருக்கு ‘தாதாசாகேப் பால்கே விருது’
தாதாசாகேப் பால்கே விருது 2013 : ஆஸ்கார் விருது பெற்ற இந்திப்பட பாடலாசியர் குல்சார் தேர்வு
மும்பை: இந்தி திரையுலகின் புகழ்பெற்ற பாடலாசிரியரான குல்சார் கடந்த 2013-ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றுபவர்களைச் கவுரவிக்கும் வகையில் இந்திய அரசால் வழங்கப் படும் உயரிய விருதுகளில் ஒன்று தாதாசாகேப் பால்கே விருது.
கடந்தாண்டிற்கான இந்த விருது பிரபல பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப் படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற குல்சாருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

22வது வயதில்...
1934-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த குல்சார் 1956-ஆம் ஆண்டிலிருந்து தொழில்முறையாக திரைப் பாடல்கள் எழுத ஆரம்பித்தார்.

திருப்புமுனை...
பிமல் ராய் எடுத்த 'பாந்தினி' திரைப்படப் பாடல்கள் குல்சாருக்கு திருப்புமுனையாக அமைந்தது. திரைப் பாடல்கள் மட்டுமல்லாது, இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், கவிஞராகவும் குல்சார் புகழ் பெற்றவர்.

அன்று முதல் இன்று வரை...
அக்காலத்தில் புகழ்பெற்ற எஸ்.டி. பர்மன், சலீல் சவுத்ரி, லக்ஷ்மிகாந்த் பியாரிலால், மதன் மோகன் முதல் இன்று இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான், சங்கர் மஹாதேவன், விஷால் பரத்வாஜ் வரை பலரது இசையில் பாடல்கள் எழுதியுள்ளார் குல்சார்.

இயக்கத்திலும் முத்திரை...
திரைக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் ஒரு சில படங்களில் பணியாற்றிய குல்சார் மேரே அப்னே, கோஷிஷ், மீரா, மாச்சீஸ், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் இவரது பங்களிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற உயரிய விருதுகள்...
தற்போது 79-வது வயதான குல்சார் கடந்த 2002-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும், 2004-ஆம் ஆண்டு பத்ம்பூஷண் விருதும் பெற்றுள்ளார்.

ஆஸ்கார் நாயகன்...
தேசிய விருதுகளோடு 20 முறை பிலிம்பேர் விருதையும் பெற்ற பெருமைக்குரிய குல்சார் கடந்த 2009-ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படப்பாடலான ஜெய் ஹோ-காக ரஹ்மானுடன் இணைந்து ஆஸ்கார் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











