நொய்டா சர்வதேச திரைப்பட விழா...3 விருதுகளை தட்டிச் சென்ற ஜெய்பீம்
சென்னை : நொய்டாவில் நடைபெற்ற 9 வது சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் 3 முக்கிய பிரிவுகளில் விருதுகளை தட்டிசென்றுள்ளது. இதற்காக படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சூர்யா நடித்து ஓடிடி.,யில் வெளியான இரண்டாவது படம் ஜெய்பீம். கடும் விமர்சனங்கள், எதிர்ப்புகள், பாராட்டுக்கள் என பலவற்றை சந்தித்த ஜெய்பீம் படத்தில் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞராக நடித்திருந்தார். பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள ஜெய்பீம் படம், சமீபத்தில் ஆஸ்கார் பரிந்துரை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

ஜெய்பீம்க்கு 3 விருதுகள்
இந்நிலையில் Minibox office international film festival நொய்டாவில் நேற்று நடைபெற்றது. 22 பிரிவுகளின் கீழ் இந்த விழா நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச அளவிலான படங்கள் இடம்பெற்றன. இதில் ஜெய்பீம் படம் 3 விருதுகளை பெற்றுள்ளது. இந்த விருதுகள் 2010ம் ஆண்டு துவங்கி வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த படம் ஜெய்பீம்
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய மூன்று பிரிவுகளில் ஜெய்பீம் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படமாக ஜெய்பீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருது சூர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான விருது லிஜோமோல் ஜோஸுக்கும் கிடைத்துள்ளது. ஜெய்பீம் படம் ஆஸ்கார் விருதை தொடர்ந்து கோல்டன் குளோப்ஸ் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கவனத்தை ஈர்த்த படம்
சர்வதேச திரைப்படங்களுக்கான IMDb ரேட்டிங் பட்டியலிலும் ஜெய்பீம் படம் முதலிடத்தை பிடித்துள்ளது. கர்ப்பிணி பெண், போலீஸ் காவலில் இருந்த தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி வழக்கறிஞரிடம் உதவி கேட்கிறார். பல்வேறு எதிர்ப்புக்கள், போராட்டங்கள், தடைகளை தாண்டி அப்பெண்ணிற்கு நியாயம் கிடைக்க செய்கிறார். இது தான் படத்தின் கதை. இந்த கதை உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

90 நாடுகள் பங்கேற்பு
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 90 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இயக்குனர்களின் படங்கள் இடம்பெற்றன. ஆரம்பத்தில் குறும்படங்கள், தனிப்படங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த விருதுகள், தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த படங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











