Kamal: "நடிக்க வரலைனா இதுதான் பண்ணிருப்பேன்... எனக்கு அதுதான் முக்கியம்..”: கமல் ஓபன்!!
துபாய்: 2023ம் ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழா கடந்த இரு தினங்களாக துபாயில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகர், சிறந்த பின்னணி பாடகர் என இரண்டு பிரிவுகளில் உலகநாயகன் கமலுக்கு விருது கிடைத்தது.
அப்போது பேசிய கமல்ஹாசன், விக்ரம் வெற்றி, ரஜினியின் தலைவர் 171 படம் போன்றவைகள் பற்றி மனம் திறந்தார். மேலும், தான் சினிமாவில் நடிக்க வரவில்லை என்றால், என்னவாக ஆகியிருப்பேன் எனவும் அவர் ஓபனாக பேசியது வைரலாகி வருகிறது.

நடிக்க வரலைனா இதுதான் எனது வாழ்க்கை: துபாயில் 2023ம் ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த இரு தினங்களாக நடைபெற்ற இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதேநேரம் விக்ரம் படத்திற்காக கமலுக்கு சிறந்த நடிகர் விருதும், 'பத்தல பத்தல' பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகர் விருதும் வழங்கப்பட்டது.
கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்த விக்ரம், திரையரங்குகளில் 100 நாட்கள் வரை ஓடியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விக்ரம் படத்துக்கு இந்தாண்டு பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் கிடைத்து வருகின்றன. சைமா விழாவில் கமல்ஹாசன் தவிர்த்து, லோகேஷ் கனகராஜ் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார்.
மொத்தமாக விக்ரம் படத்துக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் சைமா விருது விழாவில் பேசிய கமல்ஹாசன், விக்ரம் படத்தின் வெற்றி குறித்தும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பற்றியும் குறிப்பிட்டார். அதேபோல், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள தலைவர் 171 படம் குறித்தும் பெருமிதமாக பேசியிருந்தார். அதேபோல் தனது சினிமா கேரியர் குறித்து பேசிய கமல், நடிக்க வரவில்லை என்றால் சினிமா ரசிகனாக இருந்திருப்பேன் எனக் கூறினார்.
அதாவது, "சினிமாவில் நடிகனாக வரலைனா கூட சினிமா பார்த்துட்டு இருப்பேன். அவ்ளோ சினிமா ரசிகன் நான். அந்த ரசிப்பு இல்லாமல் சினிமாவே கிடையாது. அதனால், ரசிகர்களின் இந்த சத்தம் எனக்கு ரொம்பவும் பிடித்த ஓசை. சினிமா சம்பந்தமான இதுபோன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்க வேண்டும். அதில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை" என கமல் கூறினார். கமல்ஹாசனின் இந்த பேச்சை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சினிமாவில் சம்பாதித்த அனைத்தையும், அதே சினிமாவுக்காக செலவு செய்வதில் கமலைப் போல ஒரு நடிகரைப் பார்க்க முடியாது என அனைவரும் அறிந்ததே. அப்படியே இப்போதும் தான் நடிக்கவில்லை என்றால் சினிமாவின் தீவிர ரசிகனாக இருந்திருப்பேன் என அவர் கூறியதும், ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











