ஆஸ்கார் விருது விழாவில் கவனத்தை ஈர்த்த அம்சங்கள்...இர்ஃபான் கானுக்கு கவுரவம்
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. 3 மணி நேரம் நடைபெற்ற இவ்விழா, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களும் மாஸ்க் அணியாவிட்டாலும் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கார் விருது நடைபெற்றது. இதனால் ரெஜினா கிங், இவ்விழாவை துவக்கி வைத்தார். அதிக விருதுகளை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட த ஃபாதர் படம் ஒரு விருதினை மட்டுமே பெற்றது. ஆனால் நோமட்லேண்ட் படம் அதிகபட்சமாக 3 விருதுகளை பெற்றது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை ஆகிய 3 முக்கிய பிரிவுகளில் நோமட்லேண்ட் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கார் விருதினை பெறும் இரண்டாவது பெண் என்ற பெருமையை சீன நாட்டை சேர்ந்த டைரக்டர் சோலி ஜாவோ பெற்றுள்ளார். ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா, மா ரெயினிஸ் பிளாக் பாட்டம், மாங்க், சோல், சவுண்ட் ஆஃப் மெட்டல் ஆகிய படங்கள் தலா 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றன.
இந்த ஆண்டு ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் பல படங்கள், சர்வதேச திரைப்பட விழாக்களிலும், ஓடிடி தளங்களிலும் நேரடியாக திரயைிடப்பட்ட படங்களாகும். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல படங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கி உள்ளன.
பல படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. இந்நிலையில் சமீப காலமாக பல படங்கள் நேரடியாக சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, அவை விருது வாங்குவது அதிகரித்து வருகிறது. இதனை இன்று நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவும் உறுதிபடுத்தி உள்ளது.
2020 ல் உயிரிழந்த இரண்டு பெரும் சினிமா ஜாம்பவான்களான நடிகர் இர்ஃபான் கான் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பானு அதயா ஆகியோர் 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கவுரவிக்கப்பட்டது குறிப்பிடப்படும் நிகழ்வாக அமைந்தது. இந்த ஆண்டு ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் ஒரு இந்திய படம் கூட இடம்பெறாத நிலையில், இந்திய திரையுலகை சேர்ந்த இருவர் கவுரவிக்கப்பட்டுள்ளது ஆறுதலான விஷயமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











