ஆஸ்காருக்கு செல்லும் கூழாங்கல் படம்... நயன் மகிழ்ச்சி... பிரபலங்கள் வாழ்த்து
சென்னை : சிறந்த வெளிநாட்டு மொழிப்பிரிவில் கூழாங்கல் படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படம் இத்தகைய பெருமையை பெற்றுள்ளது குறித்து நயன்தாரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதேபோல நடிகை குஷ்பூ, இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டவர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

கூழாங்கல் படம்
பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூழாங்கல். சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துவரும் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைநது இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

ஆஸ்கருக்கு பரிந்துரை
இந்நிலையில் தற்போது இந்தப் படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

சிறந்த அயல்நாட்டு படம்
இதையடுத்து தற்போது கூழாங்கல் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உறுதிப்படுத்திய ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தன்னுடைய மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அயல்நாட்டு மற்றும் சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரைக்கப்படும்.

ஆஸ்கர் விருது
இந்நிலையில் இந்த விருதுக்காக தமிழகம் சார்பில் மண்டேலா மற்றும் கூழாங்கல் படங்கள் போட்டியிட்டன. இந்தப் படங்களை இயக்குநர் ஷாஜி என் கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு கூழாங்கல் படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைத்துள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

நயன்தாரா மகிழ்ச்சி
இந்நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்த் திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை குஷ்பூவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள் வாழ்த்து
இதேபோல இயக்குநர்கள் சேரன், சீனு ராமசாமி உள்ளிட்டவர்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்தப் படம் விருது வென்று இதுபோன்ற அசலான சினிமா முயற்சிக்கு உரிய கவனம் தமிழ்நாட்டில் பெற்றுத் தர வாழ்த்துகிறேன் என்று சீனு ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











