விஜய், நயனதாராவுக்கு விருது

மாத்ருபூமி திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில், இந்த ஆண்டு முதல் முறையாக தமிழுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. போக்கிரி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகர் விருதும், ஈ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நயனதாராவுக்கு சிறந்த நடிகை விருதும் அறிவிக்கப்பட்டது. போக்கிரி பட இயக்குநர் பிரபுதேவாவுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது.
விருது வழங்கும் விழா கொச்சியில் உள்ள திறந்தவெளி மெரைன் டிரைவ் அரங்கில் நடந்தது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் விஜய்யைப் பார்க்க திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது கூட்டம் அவரைப் பார்க்க முண்டியடித்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாத்ருபூமி இதழின் நிர்வாக இயக்குநரும், ஜனதாதள தலைவருமான வீரேந்திர குமார், ஆசிரியர் பி.வி.சந்திரன், மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மோகன்லால், விஜய்க்கு விருது வழங்கினார். அப்போது கூட்டத்தினர் பெரும் ஆரவாரம் செய்து கைதட்டி மகிழ்ந்தனர். நயனதாராவுக்கு மம்முட்டி விருது வழங்கினார்.
மெரைன் டிரைவ் திறந்த வெளி அரங்கில் இதுவரை இந்த அளவுக்கு கூட்டம் வந்ததில்லை என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் கூறிக் கொண்டதைக் கேட்க முடிந்தது.
விஜய்க்கு கேரளாவில் பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பதை இந்த கொச்சி நிகழ்ச்சி நிரூபிக்கும் வகையில் அமைந்தது. மேலும், ரஜினி, கமலுக்குப் பிறகு கேரள ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ள தமிழ் நடிகர் விஜய் என்பதும் நிரூபணமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











