Oscar Awards 2019: இதுக்காகவே ‘ரியல் பேட்மேன்’ கோவை முருகானந்தத்திற்கு இன்னொரு விருது கொடுக்கலாம்!
ஆஸ்கர் விருது மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் கோவை முருகானந்தம்.
Recommended Video

கோவை: தன்னைப் பற்றிய ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் கோவையைச் சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலம்.
91வது ஆஸ்கர் விருது விழாவில் கோவையைச் சேர்ந்த முருகானந்தம் தயாரித்த மலிவு விலை நாப்கின்கள் பற்றி எடுக்கப்பட்ட பீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ் என்ற குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

மாதவிடாய் காலத்தில் இந்தியப் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் முருகானந்தம் தயாரித்த மலிவு விலை நாப்கீன் போன்றவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. முன்னதாக முருகானந்தத்தின் வாழ்க்கையைப் பற்றி பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் பேட்மேன் என்ற பெயரில் படம் வெளியானது.
அப்பட ரிலீசுக்குப் பின்னர் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு இந்திய மக்களிடையே அதிகம் ஏற்பட்டது. சமூகவலைதளப் பக்கங்களிலும் 'பேட்மேன் சவால்' என்ற பெயரில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பலர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டனர்.
இதன்மூலம் மாதவிடாய் பற்றி பொதுவெளியில் பேசுவது அநாகரீகமானது என்ற பிம்பம் உடைந்து, மற்ற உடல்பிரச்சினைகளைப் போல் தான் பெண்களுக்கு இதுவும் என்ற தெளிவு பலருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுவெளியில் பலர் தயக்கம் இன்றி இது பற்றி பேசினர்.

இந்தச் சூழ்நிலையில் தற்போது முருகானந்தம் பற்றிய ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 'ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி. இந்த சர்வதேச அங்கீகாரத்தால் இது தொடர்பான விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இப்போதும் உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது கிடைத்த மகிழ்ச்சியைக் கூட மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டு, சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என சமூகம் பற்றிய தன் சிந்தனையாகவே வெளிப்படுத்தியுள்ளார் அருணாச்சலம்.


Click it and Unblock the Notifications











