Oscars 2023: சிறந்த விஷுவல் எஃபெக்ட் - ஆஸ்கர் வென்றது அவதார் 2
நியூயார்க்: அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவில் தொடங்கியது. உலகம் முழுவதுமிலிருந்து பல மொழி படங்கள் இந்த விழாவில் போட்டியிடுகின்றன. இந்தியாவிலிருந்து ஆர்.ஆர்.ஆர் படம் சிறந்த பாடலுக்கான பிரிவில் போட்டியிட்டு ஆஸ்கரை வென்றிருக்கிறது. அதேபோல் The Elephant Whisper என்ற ஆவணப்படமும் ஆஸ்கரை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா
95ஆவது ஆஸ்கர் விருது விழா நியூயார்க்கில் உள்ள டால்பி திரையரங்கில் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றிருக்கும் நாட்டு நாட்டு பாடலுடன் இந்த விழா தொடங்கியது. இது இந்திய சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆர்.ஆர.ஆர் படம் குறித்தும், நாட்டு நாட்டு பாடல் குறித்தும் ஜிம்மி கிம்மலும் பேசினார். அதுமட்டுமின்றி அந்தப் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடிய பிறகு அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.

அவதார் 2வுக்கு விருது
இதனையடுத்து பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அவதார் 2 படத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெகட் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது. ஜோ லிட்டேரி, ரிச்சர்ட் பனேகம், எரிக் செயிண்டன், டேனியல் பேரட் இந்த விருதை பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். பல்வேறு பிரிவுகளில் நாமினேட் ஆன அவதார் 2வுக்கு ஏராளமான விருதுகள் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை கவர்ந்த அவதார்
டைட்டானிக், டெர்மினேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். இப்படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்திருக்கிறது. இதனையடுத்து அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை கேமரூன் தொடங்கினார்.

அவதார் 2 ரிலீஸ் - கலவையான விமர்சனங்கள்
படத்தின் பணிகள் முடிவடைந்து கடந்த வருடம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது. முதல் படமான "அவதார்" படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்த காலக்கட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்னைகள், பாதுகாப்புடன் இருப்பதற்கு அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும் துயரங்கள் என படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இந்தப் படமானது முதல் பாகம் பெற்ற அளவுக்கு வரவேற்பையும் பெறவில்லை, வசூலையும் குவிக்கவில்லை என்பது குரிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications