twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சேது'வால் வட இந்தியா புகைகிறது: ரஜினி

    By Staff
    |

    சேது சமுத்திரத் திட்டத்தை வைத்து சிலர் குளிர் காய நினைக்கிறார்கள். வட இந்தியாவில் அந்தப் பிரச்சினை புகைய ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு இன்னும் அது வரவில்லை. இந்தப் பிரச்சினையை முதல்வர் கருணாநிதி தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தீர்த்து வைக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    Click here for more images
    2005, 2006ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேச்சில் சேது எதிரொலித்தது.

    நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், பகல் 12 மணி வரை வெள்ளை தாடியும், தலைமுடியுமாகத்தான் இருந்தேன். எனது மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரும், நீங்கள் வெள்ளை தாடி, மீசையை எடுத்துவிட்டு தலைக்கு டை அடித்துக் கொண்டால் தான் விழாவுக்கு வருவோம் என்று கூறி விட்டார்கள்.

    இப்படியே விழாவுக்கு வந்தால் வீட்டில் ஏதோ பெரிய பிரச்சனை போல, அதனால் தான் தாடி, மீசையுடன் வந்துள்ளார் என்று பார்க்கிறவர்கள் பேசுவார்கள் என்றார்கள். அவர்கள் பேச்சை கேட்டு, நான் தாடி-மீசையை எடுத்துவிட்டு தலைக்கு டை அடித்து வந்துள்ளேன்.

    நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டுமென்றால், ஜனங்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டும் என்றால், நல்ல படங்கள் எடுக்கணும். அந்த படங்கள் நன்றாக ஓடணும். படங்கள் நன்றாக ஓடினால்தான் மதிப்பும், மரியாதையும் இருக்கும்.

    நல்ல படங்கள் எடுத்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், அதில் நடித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மரியாதை செய்ய தமிழக அரசும், கலைஞரும் விருது கொடுக்க முன்வந்து இருக்கிறார்கள்.

    இவர்களுடன் எனக்கும் சிறந்த நடிகருக்கான விருது கிடைப்பது, சந்தோஷமாக இருக்கிறது. 32 ஆண்டுகளுக்கு அப்புறமும் எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைப்பதில் சந்தோஷம்.

    சிலர் நினைக்கலாம். சந்திரமுகி படத்தில் ஜோதிகா நன்றாக நடித்தார், வடிவேல் நன்றாக நடித்தார். ஆனால் ரஜினிக்கு ஏன் விருது கொடுக்கிறார்கள் என்று. சந்திரமுகியில் சரவணனாக நடித்த ரஜினிக்கு இந்த விருது கொடுக்கவில்லை. வேட்டையனாக நடித்ததற்காக இந்த விருது கொடுக்கப்படுகிறது. இது கலைஞருக்கு தெரியும்.

    25 அல்லது 26 வருடங்களுக்கு பின்னர், நடிப்பு பற்றி நான் கொஞ்சம் சிந்தித்து நடித்த படம் சந்திரமுகி தான். நடிப்புகாக கொஞ்சம் நேரம் எடுத்து நடித்த படம். இது அந்த படத்தில் நடித்த போது, உடன் நடித்த விஜயகுமார், வடிவேல் ஆகியோர் கேட்டார்கள். கிளைமாக்சில் சண்டை கூட இல்லை. என்ன செய்யப் போகிறீர்கள் என்றார்கள்.

    3 நிமிடம்தான் அந்த காட்சி. அதில் நான் நடித்து பெயர் தட்டிட்டு போயிடணும். 15,16 ஷாட்களிலும் வேறு மாதிரி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். எப்படி நடிக்கலாம் என்று யோசித்தேன்.

    அவுரங்கசீப்பின் வரலாறை படித்தபோது, விஷயம் கிடைத்தது. அவுரங்கசீப் காலத்தில், அரவாணிகள் மாதிரி மிகப் பெரிய வீரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் இன்ஸ்ப்ரேஷன் தான் சந்திரமுகியில் நான் நடித்த வேட்டையன் பாத்திரம். எல்லோருக்கும் பிடித்தது. அந்த கதாப்பாத்திரத்தின் நடிப்புக்காக விருது கிடைப்பதில், மிக்க மகிழ்ச்சியும், சந்தோஷமும் அடைகின்றேன்.

    பருத்திவீரன் படத்தில் கார்த்தி-ப்ரியாமணி நடிப்பு பற்றி இங்கே பேச வேண்டும். நூறு, இருநூறு படங்களில் நடித்த பின்னர் கிடைக்கும், அனுபவமும், முதிர்ச்சியும் கார்த்தி நடிப்பில் தெரிந்தது. மிக அருமை. குறிப்பாக, கடைசி காட்சியில் ப்ரியாமணியின் பிணத்தை பார்த்து கதறியழும்போது, ஹாட்ஸ்ஆப். அதேபோல் ப்ரியாமணியும் மிக சிறப்பாக நடித்து இருந்தார். அமீர் இயக்கம் சிறப்பாக இருந்தது.

    பொதுவாக, வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கடினம். வாய்ப்பு என்பது, தவம் மாதிரி. சில நேரங்களில் வாய்ப்பு அதுவாக நம்மை தேடி வரும். சில நேரங்களில் வாய்ப்பை தேடி நாம் போக வேண்டும் அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    விஜய்க்கு காதலுக்கு மரியாதை, குஷி, அஜீத்திற்கு காதல் கோட்டை, வாலி. விக்ரமுக்கு சேது, அந்நியன். இத்தனை சாதனைகள் புரிந்த ஜாம்பவான்கள் இங்கே இருக்கின்றார்கள்.

    'பெரியார்' ஒரு விருந்து:

    பெரியார் படம் பார்த்த பின்பு தான் தெரியாத விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன். உடனே கி.வீரமணிக்கு கடிதம் எழுதினேன். இங்கே நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. சிலர் என்னிடம் பெரியார் படத்தை நீங்கள் வரவேற்கலாமா, இப்படி பேசலாமா என்று கேட்டார்கள்.

    பெரியார் ஒரு விருந்து மாதிரி. அந்த விருந்தில் பத்து விதமான பண்டங்கள் உள்ளன. அவரிடம் கடவுள் எதிர்ப்பு கொள்கை மட்டுமா இருக்கிறது. தீண்டாமை, சாதி ஒழிப்பு என பல நல்ல கொள்கைகள் இருக்கிறதே. நான் கடவுள் எதிர்ப்பு கொள்கையை எடுக்காமல், நல்ல கொள்கைகளை எடுத்துக் கொண்டேன். பத்து விதமான பண்டங்களில் எனக்கு பிடித்த பண்டங்களை எடுத்துக் கொண்டேன்.

    கலைஞர் எழுதிய மந்திரி குமாரி திரைக்கதையை படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அந்த திரைக்கதையை வைத்துக் கொண்டு, நான் கூட டைரக்ட் செய்துவிடலாம். அத்தனை தெளிவாக இருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் நடிப்பு, உடையலங்காரம், செட் ஆகிய அம்சங்கள் ஒரு அடித்தல்-திருத்தல் இல்லாமல் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அந்த படத்தை பார்த்தபோது, கலைஞரின் திரைக்கதை அப்படியே இருந்தது.

    பல ஆண்டுகளுக்கு முன்னர் டி.ராஜேந்தர் என்னை வந்து சந்தித்தார். இலங்கேஸ்வரன் படம் எடுக்கப்போவதாகவும், அதில் நான் ராவணனாக நடிக்க வேண்டும் என்றும் என்னை கேட்டார். இதற்கு கலைஞர் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்றார்.

    நாம் ஏதோ, 'இது இப்படி இருக்கு', 'அதிருது, உதறுது' என்று பேசி நடிக்கிறோம். கலைஞர் வசனத்தை பேச முடியுமா என்று தயங்கினேன். இதை நான் கலைஞரிடம் சொல்லியிருக்கிறேன். அவர் என்னிடம் மலைக்கள்ளன் படம் பார்த்தீர்களா என்று கேட்டார். பார்த்தேன் என்றேன். அதே படத்தை சிவாஜி பேசி நடித்தால் எப்படி இருந்திருக்கும் என்று கேட்டார்.

    ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் நான் இங்கே ஒரு விஷயத்தை பேச விரும்புகிறேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சேது சமுத்திர திட்டம் பற்றி பலவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதனால் லாபமாக இருக்குமா, ஆழமாக இருக்குமா என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.

    செண்டிமெண்ட் ஆக ஒரு விஷயம் பூதாகரமாக பேசப்படுகிறது. அதன் சீரியஸ்னஸ் இன்னும் தமிழ்நாட்டுக்கு தெரியவில்லை. வட மாநிலங்களில் உள்ளவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த விஷயத்தை ஊதி, நெருப்பு மூட்டி, குளிர் காயப் பார்க்கிறார்கள். நமக்கு காரியம் நடக்கணும். வட இந்தியாவில் உள்ள தலைவர்கள் எல்லோரும் கலைஞரின் நண்பர்கள் தான். அவர்களிடம் பேசி, கலைஞர் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ரஜினி.

    Read more about: rajini
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X