கோச்சடையான் படத்துக்காக சவுந்தர்யா ரஜினிக்கு என்டிடிவி விருது!
டெல்லி: கோச்சடையான் படம் மூலம் இந்தியத் திரையுலகுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக சவுந்தர்யா ரஜினிக்கு என்டிடிவியின் 'இந்தியன் ஆப் தி இயர்' விருது கிடைத்துள்ளது.
என்டிடிவி நிறுவனம் ஆண்டுதோறும் 'ஆண்டின் சிறந்த இந்தியர்' விருதினை வழங்கி வருகிறது.

தீபிகா
இந்த ஆண்டு நடந்த விருது நிகழ்ச்சியில், ரன்பீர் கபூருக்கு பாலிவுட்டின் இளைஞர் அடையாளம் என்ற விருதும், கங்கனா ரனவத்துக்கு ஆண்டின் சிறந்த நடிகர் விருதும், தீபிகா படுகோனுக்கு சிறந்த பொழுதுபோக்காளர் விருதும் வழங்கப்பட்டது.
பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு 2014-ன் சிறந்த இந்தியர் விருது வழங்கப்பட்டது.

சவுந்தர்யா ரஜினி
கோச்சடையான் படம் மூலம் இந்தியத் திரைத் துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக சவுந்தர்யா ரஜினிக்கு, சிறந்த இந்தியர் விருது வழங்கப்பட்டது.

வெளியாகும் முன்பே...
கோச்சடையான் படம் வரும் மே 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தப் படம் வெளி வருவதற்கு முன்பே விருதுகளைப் பெற ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு மூன்று முறை
சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று முறை என்டிடிவி விருதுகளைப் பெற்றுள்ளார். 2008-ல் இந்தியாவின் சிறந்த பொழுதுபோக்காளர் விருதும், 2010-ல் பத்தாண்டு சினிமாவின் சிறந்த பொழுதுபோக்காளர் விருதும், கடந்த ஆண்டு கிரேட்டஸ்ட் இந்தியர் விருதும் பெற்றுள்ளார்.

லதா ரஜினி
இந்த விருது விழாவில் லதா ரஜினி, சவுந்தர்யாவின் கணவர் அஸ்வின் ஆகியோர் பங்கேற்றனர். என்டிடிவி தலைவர் பிரணாய் ராய் அவர்களை வரவேற்றார்.


Click it and Unblock the Notifications











