பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய சவுக்கார் ஜானகி...நாசர் மத்திய அரசுக்கு நன்றி சொன்ன தருணம்
சென்னை: வரலாறு புகழும் நாயகி சவுக்கார் ஜானகி அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கொடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி சொன்னார் நடிகர் நாசர்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும் திரையுலகின் பல சாதனைகள் படைத்திட்ட வரலாற்று புகழ் நடிகை சவுக்கார் ஜானகி அவர்களுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் பத்மஶ்ரீ விருதை அறிவித்து கௌரவித்துள்ளது. தமிழ் சினிமா நடிகர் நடிகர் நடிகைகள் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
சவுக்கார் ஜானகி தன் 14 வயதிலேயே மேடை நாடகம் மூலம் நடிப்பு துறையில் கால்பதித்தவர், தன் 18 வயதில் 1949 ஆம் ஆண்டில் 'சவுக்கார்' எனும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

கலையுலகிற்கு
தமிழ்,தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 450 க்குமேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். கலையுலகிற்கு அவர் செய்திட்ட அறப்பணிகள், சாதனைகள் ஏராளம். மொழிகள் தாண்டி கணக்கிலடங்கா வெள்ளிவிழா வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா சார்பில்
நடிகர் கார்த்தியின் "தம்பி", கண்ணன் இயக்கத்தில் சந்தாணம் நடித்த 'பிஸ்கோத்' படம் வரையிலும் நடிப்பை தொடர்ந்து வருகிறார். கலையுலக பொக்கிஷமான நடிகை சவுக்கார் ஜானகி அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கௌரவம் கிடைத்துள்ளதை தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சார்பில் நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும்
இது குறித்து நடிகர் நாசர் வெளியிட்ட அறிக்கையில்.. ஓ எங்கள் 'சவுக்கார்' அம்மா..அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்! ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை. புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி! 'புதிய பறவையில்' மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடிக்கண்களா? ஆச்சர்யம்! கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!! தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய் "பத்மஶ்ரீ" உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை.

முதல்வர்களுடன் பணியாற்றிய பெருமை
தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். "பத்மஶ்ரீ" விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் போன்ற அத்தனை பிரபலங்களுடன் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்து வந்தவர் சௌகார் ஜானகி. நாலு முதல்வர்களுடன் பணியாற்றிய பெருமை சவுகார்ஜானகி அவர்களுக்கு மட்டுமே உண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பத்மஸ்ரீ பட்டம் வாங்கியது கலை உலகத்திற்கும் தமிழ் சினிமாவுக்கும் மிகப்பெரிய பெருமையாகும் .நடிகர் சங்கம் சார்பாகவும் தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சார்பாகவும் நாசர் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











