மத்திய அரசுக்கு எதிர்ப்பு... தேசிய விருதை புறக்கணிக்க படக்குழு முடிவு
கொச்சி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய விருது விழாவை புறக்கணிக்கப் போவதாக, சுடானி ஃபிரம் நைஜீரியா படக்குழு அறிவித்துள்ளது.
சவுபின் சாஹிர், நைஜீரிய நடிகர் சாமுவேல் அபியோலா ராபின்சன், அனீஷ் மேனன், அப்துல்லா, சாவித்திரி சசிதரன் உட்பட பலர் நடித்துள்ள மலையாள படம், சூடானி ஃபிரம் நைஜீரியா. ஸக்காரியா முகமது இயக்கி இருந்த இந்தப் படத்தை தயாரித்து ஒளிப்பதிவு செய்தவர் சைஜு காலித். இந்தப் படம் கேரளாவில் வரவேற்பை பெற்றது.

கேரள திரைப்பட விருது வழங்கும் விழாவில், 5 விருதுகளை இந்தப் படம் பெற்றது.
இந்தப் படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருதும் சிறந்த குணசித்திர நடிகைக்கான சிறப்பு விருது இதில் சாவித்திரி சசிதரனுக்கும் கிடைத்தது. இந்நிலையில் தேசிய விருதை புறக்கணிக்கப் போவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்தச் சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
இந்த சட்டத் திருத்தத்துக்கு, சுடானி ஃபிரம் நைஜீரியா படக்குழுவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி இதன் இயக்குனர் ஸக்காரியா கூறும்போது, குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்கும் விதமாக, தேசிய விருது விழாவை புறக்கணிக்க எங்கள் படக்குழு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











