வயதான கேரக்டரில் நடித்த டாப்ஸிக்கு விருது
மும்பை: இந்தி படத்தில் வயதான கேரக்டரில் நடித்த நடிகை டாப்ஸிக்கு, சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழில், வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்த அவர் இந்திக்குச் சென்றார். அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. இதையடுத்து அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார் டாப்ஸி.

இந்நிலையில், அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. துஷார் ஹிரனந்தானி இயக்கிய சாதிக் கி ஆங் என்ற படத்தில் நடித்தற்காக இந்த விருது கிடைத்துள்ளது.
இந்த வருட ஸ்டார் ஸ்கிரீன் விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை, தன்னுடன் நடித்த பூமி பட்னேகருடன், டாப்ஸி பகிர்ந்து கொண்டார். வயதான துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகளான சந்திரோ தோமர், பிரகாஷ்னி தோமர் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

இந்த விருது பற்றி இன்ஸ்டாகிராமில், 'வயதான கேரக்டர்களில் எங்களை ஏன் நடிக்க வைத்தீர்கள் என்ற கேள்வியை இனி எதிர்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன், துஷார். எங்கள் மீது நம்பிக்கை வைத்த சந்திரோ தோமர், பிரகாஷ்னி தோமர் ஆகியோருக்கும் விருதுக்குத் தேர்வு செய்த குழுவுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார் டாப்ஸி.


Click it and Unblock the Notifications











