ரஜினிக்கு மத்திய அரசின் உயர்ந்த 'இந்திய சினிமா பிரபலம் 2014' விருது
கோவா: நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகர் 2014 என்ற உயர்ந்த விருதினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கி கவுரவித்தது மத்திய அரசு.
கோவாவில் நடைபெறும் 45வது சர்வதேச திரைப்பட விழாவில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் சாதனை நடிகர் அமிதாப் பச்சன் இருவரும் இந்த விருதினை ரஜினிக்கு வழங்கினர்.

விருது வழங்கும் முன் ரஜினி நடித்த படங்களின் தொகுப்பாக ஒரு காணொலி திரையிடப்பட்டது. அதில் ரஜினி தன் திரை வாழ்க்கையை ஆரம்பித்ததிலிருந்து, இப்போது நடிக்கும் லிங்கா வரையிலான படங்களின் காட்சிகள், ரஜினி பேசும் அதிரடி பஞ்ச் வசனங்கள் காட்டப்பட, அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.

பின்னர் ரஜினி மேடைக்கு அழைக்கப்பட்டார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அவருக்கு கைகொடுத்து வரவேற்றார். அமிதாப் பச்சன் மலர்ச் சென்று கொடுத்து கட்டித் தழுவினார். ரஜினி குனிந்து அவர் காலைத் தொட்டு வணங்கினார்.
பின்னர் அருண் ஜெட்லி சால்வை அணிவித்து விருதினை ரஜினிக்கு வழங்கினார். அமிதாப் பச்சன் விருது பற்றிய மடலை வழங்கினார்.
பின்னர் தனக்கு வழங்கப்பட்ட விருதுக்கு ரஜினி நன்றி கூறினார்.


Click it and Unblock the Notifications











