5 தமிழக திரையுலகினர் உள்ளிட்ட கலைஞர்களுக்கு தேசிய விருதுகள்.. வழங்கினார் பிரணாப்.. !
டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற 61வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
டெல்லியில் நேற்று மாலை 61-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.
சிறந்த குறும்படத்திற்கான விருதை 'தருமம்' என்ற குறும் படத்திற்கு பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

விருதை வென்ற தங்கமீன்கள்...
சிறந்த பிராந்திய மொழிபடத்திற்கான விருது தமிழில் வெளிவந்த 'தங்க மீன்கள்' படத்திற்கு கிடைத்தது. இந்த விருதை படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் மற்றும் இயக்குநர் ராம் ஆகியோர் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்....
அதேபோல், தங்க மீன்கள் படத்தில் வரும் ‘ஆனந்த யாழை' பாடலுக்காக சிறந்த பாடலாசிரியரிக்கான விருதை நா. முத்துகுமார் பெற்றார்.

சிறந்த குழந்தை நட்சத்திரம்...
தங்கமீன்கள் படத்தில் நடித்த பேபி சாதனா, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

தலைமுறைகள்....
தேசிய ஒருமைப்பாட்டு விருதை வென்ற தலைமுறைகள் படத்திற்காக, தயாரிப்பாளர் சசிகுமாரும் இயக்குனர் பாலு மகேந்திராவின் பேரன் ஸ்ரேயாஷ் மகேந்திராவும் தங்கத்தாமரை விருதை பெற்றனர்.

வல்லினம்...
சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதினை வல்லினம் படத்திற்காக சாபு ஜோசப்புக்கு வழங்கப் பட்டது.

சிறந்த திரைப்படம்...
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, ஷிப் ஆஃப் தீஸியஸ் என்ற படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குநர்...
சிறந்த இயக்கத்திற்கான விருதை ஷாகித் என்ற இந்தி திரைப்படத்திற்காக இயக்குநர் ஹன்சல் மேத்தா பெற்றுக்கொண்டார்.

சிறந்த நடிகர்களாக இருவர்....
சிறந்த நடிகருக்கான விருதினை ஷாகித் படத்தில் நடித்த ராஜ்குமாரும், பேரறியாதவர் என் மலையாளப் படத்தில் நடித்த சூரத் வெஞ்சாரமூடுவும் பகிர்ந்துகொண்டனர்.

சிறந்த நடிகை...
சிறந்த நடிகைக்கான விருதினை இந்தி நடிகை கீதாஞ்சலி தாப்பாவும், சிறந்த துணை நடிகை விருதினை மராத்தி நடிகை அம்ருதாவும் பெற்றுக்கொண்டனர்.

தாதா சாகேப் பால்கே விருது...
இந்த விழாவில் தனது தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பிரபல பாடலாசிரியர் குல்சார் பெற்றுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











