தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய தனுஷின் திருச்சிற்றம்பலம் படம்.. சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு
டெல்லி: கடந்த 2022ம் ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம் 4 பிரிவுகளில் விருதுகளை தட்டித் தூக்கியுள்ளது. அடுத்தப்படியாக தனுஷ் மற்றும் நித்யா மேனன் கூட்டணியில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.
ஆண்டுதோறும் இந்திய அளவில் அனைத்து மொழிப்படங்களின் அடிப்படையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் படங்களை போலவே காந்தாரா, ஆட்டம், கேஜிஎப் 2, சவுதி வெள்ளைக்கா போன்ற படங்களும் தேசிய விருதுகளை பெற்றுள்ளன.

70வது தேசிய விருதுகள் அறிவிப்பு: இந்திய அளவில் ஆண்டுதோறும் சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம், காந்தாரா, கேஜிஎப் 2, ஆட்டம் போன்ற படங்கள் தேசிய விருதுகளை அதிகமாக பெற்றுள்ளன. தமிழில் மணிரத்னம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம் சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட 4 பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்றுள்ளன.
சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு: இதேபோல தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படமும் சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடன இயக்குநர் என இரண்டு தேசிய விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த நடிகையாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்த நித்யா மேனன் தேர்வாகியுள்ளார். இதேபோல சிறந்த நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். படத்தில் மேகம் கருக்காதா என்ற பாடல் சிறந்த நடன அமைப்பிற்காக தேர்வாகியுள்ளது. இந்த விருதை ஜானி மாஸ்டருடன் இணைந்து நடன இயக்குநர் சதீஷும் பெறவுள்ளனர்.

போட்டியிட்டு வென்ற நித்யா மேனன்: திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவருக்குள் நடிப்பில் மிகப்பெரிய போட்டி காணப்பட்டது. சிறந்த நடிகராக தனுஷ் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்று அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில், சிறந்த நடிகராக காந்தாரா படத்தின் ரிஷப் ஷெட்டி தேர்வாகியுள்ளார். இந்தப் படம் சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் தேர்வாகியுள்ளது.
ஏஆர் ரஹ்மானுக்கு 7வது முறையாக விருது: இதனிடையே பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏஆர் ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் 7வது முறையாக இந்த விருதை பெறுகிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் உருவான இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்த நிலையில், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூலிலும் சாதித்திருந்தது. இதனிடையே தற்போது 4 பிரிவுகளில் தேசிய விருதுகளையும் அள்ளியுள்ளது.


Click it and Unblock the Notifications











