பொன்னியின் செல்வன் ஷூட்டுக்கு புறப்பட்ட மனைவி.. கையில் கட்டுடன் கட்டியணைத்து வழியனுப்பிய நடிகர்!
மும்பை: பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு சென்ற மனைவி ஐஸ்வர்யா ராயை அவரது கணவரான நடிகர் அபிஷேக் பச்சன் கட்டியணைத்து வழியனுப்பி வைத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் கலை இயக்குநராக தோட்டா தரணி பணியாற்றுகிறார்.

யார் யார் என்ன கதாப்பாத்திரம்?
இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு இடையில் தடைப்பட்டது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் யார் யார் என்னென்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் அண்மையில் வெளியானது.

வந்தியத் தேவனாக நடிகர் கார்த்தி
அதன்படி சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடிக்கிறார். அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறார். மேலும் வந்தியத் தேவனாக கார்த்தி நடிக்கிறார். குந்தவை கதாப்பாத்திரத்தில் த்ரிஷா நடிப்பதாகவும், நந்தினி கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் பார்த்திபனும் நடிக்கின்றனர். ஆனால் இந்த பட்டியலை படக்குழு வெளியிடவில்லை.

மும்பை விமான நிலையத்தில் ஐஸ்வர்யா ராய்
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மும்பை கலினா விமான நிலையத்தில் தனது மகள் ஆரத்யா, கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோருடன் காணப்பட்டார். எங்கு செல்கிறார் என்று தெரியாத நிலையில் ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து புறப்பட்டதாக தெரிகிறது.

மகளையும் மனைவியையும் கட்டியணைத்து
மத்திய பிரதேசத்தின் ஓர்ச்சா பகுதிக்கு அவர் செல்லலாம் என கூறப்படுகிறது. மகளையும் மனைவியையும் வழியனுப்பி வைக்க நடிகர் அபிஷேக் பச்சன் விமான நிலையத்திற்கு வந்தார். மகளையும் மனைவியையும் கட்டியணைத்து அவர் வழியனுப்பி வைத்தார்.

வலது கையில் பெரிய கட்டு
அப்போது அபிஷேக் பச்சனின் வலதுகையில் பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. இதனால் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருந்த அபிஷேக் பச்சன், கறுப்பு வெள்ளை ட்ராக் சூட் அணிந்திருந்தார். ஐஸ்வர்யா ராய்யும் அபிஷேக் பச்சனும் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 2011ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி இந்த தம்பதிக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.


Click it and Unblock the Notifications











