EMI கட்டக்கூட பணம் இல்ல.. காரை எடுத்து சென்ற அதிகாரிகள்.. ஷாருக்கான் கடந்து வந்த வாழ்க்கை!
சென்னை: பாலிவுட் திரையுலகில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் ஷாருக்கான். பாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார் ஷாருக்கான். தற்போது ஷாருக்கானுக்கு 6000 கோடிவரை சொத்து இருக்கும் நிலையில் ஒரு காலத்தில் EMI கட்டக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டது குறித்து நடிகை ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக கடந்த 30 ஆண்டுகளாக வலம் வருகிறார் ஷாருக்கான். பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர் சில சறுக்கல்களை சந்தித்தார். இதைத் தொடர்ந்து பதான் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மீண்டும் தனது ஆட்டத்தை ஆடத் தொடங்கிய ஷாருக்கானுக்கு அட்லியின் இயக்கத்தில் வெளியான ஜவான் என்ற மெகாஹிட் படமாக அமைந்து ஆயிரம் கோடியை வசூலித்தது. ஒரே வருடத்தில் பதான் மற்றும் ஜவான் என இரு மெகாஹிட் படங்களில் மாஸ் காட்டினார் ஷாருக்கான்.

ஷாருக்கான் சொத்து: ஒரு படத்திற்கு 180 கோடி வரை சம்பளம் வாங்கும் மாஸ் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு மட்டும் 6000 ஆயிரம் கோடியாக உள்ளது. மும்பையில் 200 கோடியில் பங்களா, வெளிநாடுகளிலும் பங்களா, பல சொகுசு கார்கள், சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கணிசமான வருமானத்தை அள்ளி வரும் ஷாருக்கான் ஒரு காலத்தில் இஎம்ஐ கூட கட்டமுடியாத நிலையில் இருந்ததாக அவருடன் பல படத்தில் சேர்ந்து நடித்த ஜூகி சாவ்லா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
EMI கட்ட பணம் இல்ல: ஷாருக்கான் சினிமாவிற்கு வந்த புதிதில் ஆசை ஆசையாய் ஒரு கருப்பு ஜிப்சியை வாங்கினார். ஆனால், சில காரணங்களால், அவரால் தனது காரின் EMI செலுத்த முடியாமல் போனது. அப்போது வங்கியில் இருந்து வந்து அதிகாரிகள் காரை ஜப்தி செய்து எடுத்து சென்றனர். அப்போது, படப்பிடிப்புக்கு சோகமான முகத்துடன் வந்திருந்தார். அப்போது நான் என்ன ஆச்சு என்று கேட்டேன், அப்போது மனமுடைந்த இந்த விஷயத்தை சொன்னார். நான் வருத்தப்படாதீர்கள், எதிர்காலத்தில் நீங்கள் பல கார்கள் வாங்குவீர்கள் என்றேன். நான் அன்று சொன்ன நடந்து விட்டது. தற்போது அவர் வீட்டு வாசலில் பல கார்கள் நிற்கின்றன என ஜூகி சாவ்லா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஷாருக்கானின் அடுத்த படம்: ஷாருக்கான் ஜவான் படத்தை தொடர்ந்து கிங் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் மே மாதம் துவங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், முன் தயாரிப்பு பணிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சுஜாய் ஜோஷ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹான் கான் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன் ஓடிடியில் வெளியான தி ஆர்ச்சிஸ் படத்தில் நடித்திருந்த நிலையில், கிங் படம் மூலம் அவர் வெள்ளித்திரையில் களமிறங்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











