அதிர்ச்சி.. 32 வயதான இளம் நடிகை மாளவிகா தாஸ் மர்ம மரணம்... உடலை வாங்க கூட உறவினர் வராத சோகம்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை மாளவிகா தாஸ் தனது அபார்ட்மெண்ட் அறையில் உயிரிழந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை நூர் மாளவிகா தாஸ் கஜோலுடன் கடைசியாக டிரையல் எனும் வெப்சீரிஸில் இணைந்து நடித்தார். உயிரிழந்த மாளவிகா தாஸுக்கு 32 வயதாகிறது.
கத்தார் ஏர்வேஸில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த மாளவிகா தாஸ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தால் அசாமில் இருந்து வீட்டை விட்டு வந்து மும்பையில் உள்ள லோக்வாண்ட்வாலாவில் வசித்து வந்தார். கடந்த ஜூன் 6ம் தேதி நடிகையின் வீட்டில் இருந்து துர்நாற்றம் பக்கத்து வீடுகளில் வீசத் தொடங்கிய நிலையில், பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸாருக்கு போன் மூலம் புகார் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் வீட்டுக்கு வந்து கதவை உடைத்துப் பார்க்க மாளவிகா தாஸ் உயிரிழந்தது தெரிய வந்தது. இவரது மரணம் பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தற்கொலையா?: வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் நடிகை மாளவிகா தாஸ் என போலீஸார் முதல் கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது வீட்டில் உள்ள மொபைல் போன் மற்றும் மருந்துகளை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக கூர்கானில் உள்ள சித்தார்த் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். நடிகை தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில், எந்தவொரு சூசைட் நோட்டும் கிடைக்காத நிலையில், மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலை வாங்க யாருமில்லை?: நடிகையின் பெற்றோருக்கு வயதான நிலையில், அவர்களால் மும்பைக்கு வந்து உடலை வாங்க முடியாத சூழல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகையின் நண்பரும் நடிகருமான அலோக்நாத் பதக் தான் அவரது உடலை வாங்கி தகனம் செய்துள்ளாராம். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என யாருமே நடிகையின் உடலை வாங்க வராமல் போனது ஏன் என பாலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கஜோலுடன் இணைந்து: கடந்த ஆண்டு கஜோல் நடித்த 'டிரையல்’ வெப்சீரிஸில் அவருடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானவர் தான் மாளவிகா தாஸ். வால்கமன், சிஸ்கியான் உள்ளிட்ட பல்வேறு வெப்சீரிஸ்களிலும் சில படங்களிலும் இவர் துணை நடிகையாக நடித்துள்ளார். இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











