1500 சினிமா தொழிலாளர்களுக்கு உதவி.. நேரடியாக வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்திய பிரபல ஹீரோ!
மும்பை: பிரபல நடிகர் அக்ஷய் குமார் 1500 சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

எண்ணிக்கை
இருந்தும் இந்தத் தொற்றுக்கு இந்தியாவில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 பேர் பாதிப்படைந் துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 67 ஆயிரத்து 691 பேர் குணமடைந்துள்ளனர். 86 ஆயிரத்து 110 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றுவரை இந்தியா முழுவதும் 4,531 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தொழிலாளர்கள்
இதற்கிடையே லாக்டவுன் காரணமாகத் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்புகள் இல்லாததால், சினிமா தொழிலாளர்கள் கடந்த 2 மாதமாக கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்கு நடிகர், நடிகைகள் உதவி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அக்ஷய்குமார், சுமார் 1500 தொழிலாளர்களுக்கு உதவி செய்துள்ளார்.

வங்கி கணக்கு
அவர்களின் வங்கி கணக்கில் தலா 3 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்தி உள்ளார். இதுபற்றி தெரிவித்துள்ள சினிமா மற்றும் டிவி நடிகர்கள் சங்கத்தின் இணை செயலாளர் அமித் பேஹ்ல், 'எங்கள் அமைப்பின் சார்பில் அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதும், கொஞ்சமும் தாமதிக்காமல் 1500 உறுப்பினர்களின் வங்கி கணக்கைக் கேட்டார். பிறகு அவர்களின் கணக்கில் பணத்தைச் செலுத்தினார்.

நிவாரண நிதி
மேலும் என்ன உதவி வேண்டும் என்றாலும் செய்ய தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார்' என்றார். நடிகர் அக்ஷய் குமார், கொரோனா ஒழிப்புக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியும் மும்பை போலீஸுக்கு ரூ.2 கோடியும் மும்பை கார்ப்பரேஷனுக்கு ரூ.3 கோடியும் ஏற்கனவே வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











