Shah rukh khan: சல்மான் கானை தொடர்ந்து ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல்.. பதட்டத்தில் பாலிவுட்!
மும்பை: பாலிவுட்டின் சூப்பர் ஆக்டர்களாக ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவரும் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகர்களாக பல ஆண்டுகளாக பாலிவுட்டில் இருந்து வருகின்றனர். ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் இருவரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டிலேயே ஜவான், பதான் என மூன்று படங்களில் நடித்திருந்தார் ஷாருக்கான்.
இதனிடையே, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது. இந்த கொலை மிரட்டலையடுத்து அவருக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. சில கோடிகளை கேட்டு அவருக்கு இந்த மிரட்டல் விடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள்: பாலிவுட் சூப்பர் ஹீரோக்களாக தொடர்ந்து பல ஆண்டுகளாக மாஸ் காட்டி வருகிறார்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான். இவர்கள் இருவரும் தமிழில் கமல் -ரஜினி போல அஜித் -விஜய் போல பாலிவுட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை தங்களது அடுத்தடுத்த படங்கள் மூலம் இவர்கள் நிரூபித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொலை மிரட்டவிலும் நாங்கள் இருவரும் ஒன்றுதான் என்பதை தற்போது சல்மான் கானை தொடர்ந்து ஷாருக்கானும் அனுபவப்பட்டுள்ளார்.
ஷாருக்கானிற்கு கொலை மிரட்டல்: கடந்த ஆண்டு அக்டோபரிலேயே ஷாருக்கானிற்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ஆயுதமேந்திய 6 போலீசார் 24 மணிநேரமும் இவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர். இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த ஃபைசான் கான் என்பவர் இந்த கொலை மிரட்டலை அவரது தொலைபேசி மூலம் விடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த செல்போன் நம்பரை வைத்து அவரை தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.
ரசிகர்கள் அதிர்ச்சி: முன்னதாக இந்த விஷயம் குறித்து பாந்த்ரா காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதையடுத்து ஷாருக்கானுக்கு பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தன்னுடைய வீட்டு வாசலில் ரசிகர்கள் முன்னிலையில் எந்தவித ஆயுத பாதுகாப்பும் இல்லாமல் தோன்றி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது பாலிவுட்டில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சல்மானை தொடர்ந்து ஷாருக்கானிற்கு மிரட்டல்: கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது. கருப்பு மானை வேட்டையாடிய விவகாரத்தில் லாரன்ஸ் பிஸ்னோஸ் கேங் அவருக்கு கொலை மிரட்டல் விட்டிருந்தனர். சம்பவப்பட்ட கோயிலில் சென்று அவர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் அல்லது ஐந்து கோடி ரூபாய் பிணைய தொகையாக கொடுக்க வேண்டும் என்று அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்திலும் நடிப்பதிலிருந்து சில தினங்கள் விலகியிருந்தார்.
பாதுகாப்பு தீவிரம்: தொடர்ந்து அதிகமான போலீஸ் பாதுகாப்புடன் அவர் அடுத்தடுத்து ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தற்போது சல்மான் கானை தொடர்ந்து ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் கேட்டு அவருக்கு இந்த மிரட்டல் விடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விஷயத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











