சைஃப் அலிகானுக்கு கத்தி குத்து.. நலம் விசாரிக்க படையெடுத்த பாலிவுட்
மும்பை: பாலிவுட்டின் பிரபல நடிகரான சைஃப் அலிகான் வீட்டில் நேற்று அதிகாலை திருடர் ஒருவர் திருட முயற்சித்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் சைஃப் அலிகானை அந்த நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். கத்தி குத்துப்பட்ட சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சூழல் இப்படி இருக்க அவரை நலம் விசாரிப்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்கள் மருத்துவமனைக்கு படையெடுத்திருக்கிறார்கள்.
பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்தவர் சைஃப் அலிகான். ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு குழந்தைகளும் இருக்கிறார்கள். பாந்த்ராவில் இருக்கும் தங்களுடைய பங்களாவில் குடும்பத்துடன் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்துவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க அவர்களது நிம்மதியை கெடுக்கும் விதத்தில் நேற்று ஒரு சம்பவம் அரங்கேறியது.

என்ன நடந்தது?: அதாவது நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சைஃப் அலிகான், கரீனா கபூர், குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். அந்த சமயத்தில் ஒரு நபர் சைஃபின் பங்களாவுக்கு திருட வந்திருக்கிறார். திருட வந்தவரை பங்களாவின் வாட்ச்மேன் பார்த்துவிட்டு; யார் என்ன என்று விசாரித்ததில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் சத்தம் அதிகமானதை அடுத்து தூக்கத்திலிருந்து எழுந்து வந்த சைஃப் அலிகானும் வாட்ச்மேனோடு சேர்ந்து விசாரித்திருக்கிறார்.
கத்தி குத்து?: அப்போது திருட வந்த நபருக்கும் சைஃப் அலிகானுக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின்போது சைஃப் அலிகானை அந்த நபர் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சத்தத்தை கேட்டு குடும்பத்தில் இருந்த மற்றவர்களுக்ம் எழுந்துவிட்டார்கள். ரத்தத்தோடு இருந்த சைஃப் அலிகானை உடனடியாக அருகில் இருந்த லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்தார்கள். மொத்தம் ஆறு இடங்களில் சைஃப் அலிகானுக்கு கத்தி குத்து விழுந்திருக்கிறது.
மருத்துவர் கூறியது?: உடனடியாக அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து மருத்துவர், “சைஃப் அலிகானை சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு உடலில் மொத்தம் ஆறு இடங்களில் கத்தி குத்து காயங்கள் இருந்தன. கழுத்து பகுதியிலும் ஒரு காயம் இருந்தது. அதில் இரண்டு காயங்கள் ரொம்பவே ஆழமாக இருந்தது. 5.30 மணி அளவில் நரம்பியல் நிபுணர் நிதின் தலைமையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.
படையெடுத்த பாலிவுட்: சைஃப் அலிகானின் உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த சம்பவம் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்நிலையில் அவரது உடல்நிலையை விசாரிக்க ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சென்று கரீனா கபூருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு விரைவில் சைஃப் அலிகான் உடல்நலம் தேறிவிடுவார் என்று தைரியம் கூறி வந்தனர்.


Click it and Unblock the Notifications











