சந்தா கோச்சார் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்திற்கு தடை.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி!
டெல்லி: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் எம்.டி.சந்தா கோச்சாரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ ஆவார். இவர் ஐசிஐசிஐ வங்கியில் சிஇஓவாக இருந்த போது, வீடியோகான் நிறுவன குழுமத்திற்கு 1875 கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்க அனுமதி அளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக முறைகேடு நடந்திருப்பதாக கூறி கோச்சார் மற்றும் அவரது கணவரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோச்சாரின் வாழ்க்கை
இந்நிலையில் சந்தா கோச்சாரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'சந்தா- ஒரு வாழ்க்கையை அழித்த கையெழுத்து' (chanda- a signature that ruined a career) என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்கம்
இந்தப் படத்தை மனோஜ் நந்த்வானா மற்றும் அகிலேஷ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அஜய் சிங் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கோவா திரைப்பட விழா
நவம்பர் 28ம் தேதி கோவா திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட இருந்தது. இந்நிலையில் சந்தா கோச்சாருக்குத் தெரியாமல் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி அவரது சார்பில் படத்தை திரையிட தடைக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

களங்கம் ஏற்படுத்த முயற்சி
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தப் படம் சந்தா கோச்சாருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இடைக்காலத் தடை
இதற்கு படத்தின் நாயகியாக நடித்துள்ள குர்லீன் சோப்ரா தனது சமூக வலைபக்கங்களில் போட்ட பதிவுகளே ஆதாரம் என்று கூறி அவற்றை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், படத்தை கோவா பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிட இடைக்கால தடை விதித்தது.

நீதிமன்றம் உத்தரவு
மேலும் "சந்தா: ஒரு வாழ்க்கையை அழித்த ஒரு கையொப்பம்" ஆன்லைனிலோ அல்லது ஆஃப்லைனிலோ, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அல்லது வேறு எந்த வடிவத்திலோ வேறு எந்த பெயரிலோ அவரது பெயரின்றி சுயசரிதை என்று கூறி அல்லது வாதியுடன் தொடர்புடைய திரைப்படத்தைப் பற்றி எந்தவொரு வர்ணனையையும் விளம்பரத்தையும் தயாரிப்பது, வெளியிடுவது, பகிர்வது அல்லது பரப்புவது எந்த வகையிலும், அடுத்த விசாரணை தேதி வரை வெளியிடக்கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மீண்டும் விசாரணை
மேலும் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது. இன்றைய விசாரணையில் படத்தை நாளை மறுநாள் கோவா பிலிம் ஃபெஸ்டிவலில் வெளியிடலாமா வேண்டாமா என்பது குறித்து தெரியவரும்.


Click it and Unblock the Notifications











