உத்தமபுத்திரன் பார்ட் 2வே எடுக்கலாம்.. ஜெனிலியாவை திடீரென சந்தித்த தனுஷ்.. கூடவே பிரியாமணி!
சென்னை: நடிகர் தனுஷ் தமிழில் பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். அதே நேரத்தில், இந்தியில் க்ரித்தி சனோன் உடன் நடித்து வரும் படத்தையும் அவ்வப்போது மும்பைக்குச் சென்று நடித்துக் கொடுத்து வருகிறார். சமீபத்தில், மும்பைக்குச் சென்ற தனுஷ் நடிகை ஜெனிலியாவை சந்தித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர்களுடன் தனுஷ் உடன் அதுவொரு கனாக் காலம் படத்தில் நடித்த நடிகை பிரியாமணியும் சந்தித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை ஜோதிகாவை போலவே திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜெனிலியா, சில காலம் கழித்து மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக முழு நேர நடிகையாக மாறியுள்ள ஜெனிலியா அடுத்ததாக அமீர்கான் உடன் இணைந்து சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடித்துள்ளார். விரைவில், அந்த படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.
ஹாசினியை மறக்க முடியுமா?: 2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த் நடித்த பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜெனிலியா. சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன் மற்றும் வேலாயுதம் என குறைந்த படங்களிலேயே நடித்த அவர், பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை 2012ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு திரைப்படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டார். சில படங்களில் கேமியோ ரோலில் தலையை காட்ட ஆரம்பித்த ஜெனிலியா 2020ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். வரும் ஜூன் 20ம் தேதி ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர்கான் நடித்துள்ள சித்தாரே ஜமீன் பர் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். முன்ந்தாக இந்த ஆண்டு சச்சின் திரைப்படமும் ரீ ரிலிஸ் ஆக வீடியோ மூலம் நன்றி தெரிவித்திருந்தார் ஜெனிலியா.

சூர்யா ஜோதிகாவுடன் செல்ஃபி: சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற நடிகை ஜெனிலியா சூர்யா மற்றும் ஜோதிகாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். தமிழில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், கூடிய சீக்கிரமே இணைந்து நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் உடன் சந்திப்பு: யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் கடந்த 2010ம் ஆண்டு நடித்திருந்தார் ஜெனிலியா. இப்போ கூட டிவியில் அந்த படத்தை போட்டால், குடும்பத்துடன் பார்க்க ரசிகர்கள் கூடிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஃபேமிலி டிராமாவாக படம் சூப்பராக இருக்கும். இந்நிலையில், மும்பைக்கு சென்று இருந்த நடிகர் தனுஷ் ஜெனிலியா மற்றும் அவரது வீட்டுக்காரர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோவை இன்று ஷேர் செய்துள்ளார் ஜெனிலியா.

அது ஒரு கனாக் காலம்: வெற்றிமாறனுக்கு முன்பே பாலு மகேந்திரா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் தான் 'அது ஒரு கனாக் காலம். கடந்த 2005ம் ஆண்டு அந்த படம் வெளியானது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து தனுஷ் மற்றும் பிரியாமணி இருவரும் மீண்டும் சந்தித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் அந்த படத்தின் நினைவுகளை எல்லாம் மீண்டும் ஞாபகப்படுத்தி பார்த்து வருகின்றனர். தனுஷ் நடிக்கும் இந்தி படத்தில் இவர்கள் எல்லாம் ஸ்பெஷல் கேமியோ ஏதாவது செய்கிறார்களா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











