மிரட்டி பணம் பறித்தார்... பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மீது நடிகை கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு!
மும்பை: பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மிரட்டி பணம் பறித்ததாக நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணலில் சுஷாந்த் மரணம் தொடர்பாக தன்னை பற்றி ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை கங்கனா ரனாவத் மீது இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கடந்த நவம்பர் மாதம் அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து, ஜாவேத் அக்தரின் புகார் குறித்து விசாரிக்க காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து நடிகை கங்கனா ரனாவத் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆஜரான ஜாவேத் அக்தர்
அப்போது பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய் பனுசாலி, இதுவரை 8 முறை நடிகை கங்கனா ரனாவத் வாய்தா வாங்கியுள்ளதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தவறாமல் ஜாவேத் அக்தர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருவதாகவும் தெரிவித்தார்.

நேற்று மீண்டும் விசாரணை
இதனை தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணைக்கு நடிகை கங்கனா ரனாவத், நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஆஜராகவிட்டால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு
நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டதை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது நடிகை கங்கனா ரணாவத், மும்பை நீதிமன்றத்தில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மிரட்டி பணம் பறித்ததாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

மிரட்டி மன்னிப்பு கடிதம்
மேலும் ஜாவேத் அக்தர் தன்னுடைய ஜூஹு வீட்டிற்கு தன்னையும் தனது சகோதரியையும் அழைத்து மிரட்டியதாகவும் மிரட்டி மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் அந்தேரியில் உள்ள மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் "நம்பிக்கை இழந்துவிட்டதாகவும்" கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை
இதனிடையே கங்கனாவின் வழக்கறிஞர் கங்கனா ரனாவத்தின் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கொரோனா அறிகுறிகள் இருப்பதால் கடந்த வாரம் நடிகை கங்கனா ரனாவத் விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை நலமுடன் இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











