இந்திப்பட உலகின் சோகம்...இரண்டு இசை சாதனையாளர்கள் அடுத்தடுத்து மறைவு !
மும்பை : இந்த ஆண்டு பாலிவுட் திரைத்துறைக்கு சோகமான ஆண்டாகவே தொடங்கி உள்ளது.
இந்தி திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருந்த லதா மங்கேஷ்கர் மற்றும் பப்பி லஹிரி அடுத்தடுத்து மறைந்து பாலிவுட்டை தீராத சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்திய சினிமாவின் தேன் குரலுக்குச் சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர் இப்போது நம்மிடையே இல்லை. கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த லதா மங்கேஷ்கர், பிப்ரவரி 6ந் தேதி உயிரிழந்தார். இவர் 14க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். 5 படங்களுக்கு இசையமைத்துள்ளார். லதா மங்கேஷ்கர் நினைவாக மத்திய பிரதேசத்தில் உள்ள அவரது பிறந்த ஊரான இந்தூரில் அருங்காட்சியகமும், இசைப்பள்ளியும் அமைக்கப்பட உள்ளது. அதேபோல, லதா மங்கேஷ்கர் வாழ்க்கை சினிமா படமாகவும் தயாராக உள்ளது. லதா மங்கேஷ்கரின் மறைவின் சோகம் மனதைவிட்டு மறைவதற்குள், மீண்டும் ஒரு சோகம் பாலிவுட்டில் அரங்கேறியுள்ளது.

இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லஹிரி மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள கிரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். திங்கட்கிழமை அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து வீடு திரும்பினார். இதையடுத்து, நேற்று மீண்டும் மூச்சுதிணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் லஹிரி அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு சரியாக 11.45 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது.

ஹிந்தி சினிமாவின் டிஸ்கோ கிங் பப்பி லஹிரி என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஹன்சல் மேத்தா மற்றும் அசோக் பண்டிட் ஆகியோர் சமூக ஊடகங்களில் மூத்த இசையமைப்பாளரின் மறைவு குறித்து தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











