கடைசி நேரத்தில் கூட.. மருத்துவர்களை மகிழ்வித்த நடிகர் ரிஷி கபூர்..குடும்பம் உருக்கமான அறிக்கை!
மும்பை: 'கண்ணீருடன் அல்ல, புன்னகையுடன் ரிஷி கபூர் நினைவுகூரப்பட வேண்டும்' என்று அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர். பிரபல நடிகர் ராஜ்கபூரின் மகனான இவர், ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.
சில படங்களை இயக்கியும் சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.

தீவிர சிகிச்சை
இவரது உடல்நிலை திடீரென மோசமானதை அடுத்து மும்பையில் உள்ள, ஹெச்.என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நடிகர் இர்ஃபான் கான் நேற்று உயிரிழந்த நிலையில் இந்த செய்தி பரபரப்பானது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர், இன்று காலை உயிரிழந்தார்.

அமெரிக்காவில்
முன்னதாக, ரிஷிகபூரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என்றும் அவருடைய சகோதரர் ரன்தீர் கபூர் தெரிவித்திருந்தார். கேன்சருக்காக, அமெரிக்காவில் ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த ரிஷி கபூர், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு திரும்பினார்.

உடல் நலக்குறைவு
இந்தியா திரும்பிய பின்னரும் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

கடைசி நேரத்தில்
இரண்டு வருடமாக கேன்சருடன் போராடி வந்த ரிஷி கபூர், இன்று காலை 8.45 மணிக்கு காலமானார். மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் கடைசி நேரத்தில் கூட, அவர் தங்களை மகிழ்வித்ததாகத் தெரிவித்தனர். இரண்டு வருட சிகிச்சையில் இருந்தபோதும் இயல்பாக வாழத் தீர்மானித்திருந்தார் அவர். குடும்பம், நண்பர்கள், உணவு மற்றும் சினிமா ஆகிவற்றில் அவர் கவனம் தொடர்ந்து இருந்தது.

கண்ணீருடன் அல்ல
அவரை சந்தித்த நண்பர்கள், எப்படி நோய் பாதிக்காதவாறு தன்னை வைத்துக் கொண்டிருக் கிறார் என்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து ரசிகர்கள் தெரிவித்த அன்புக்கு, நன்றியுள்ளவராக இருந்தார். கண்ணீருடன் அல்ல, புன்னகையுடன் அவர் நினைவுகூரப்பட வேண்டும் என்பதை அந்த ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்.

கட்டுப்பாடுகள்
இந்த தனிப்பட்ட இழப்பு இருந்தபோதும், உலகம் மிகவும் கடினமான, இக்கட்டானச் சூழலில் இப்போது இருக்கிறது என்பதை அறிவோம். பொது இடங்களில் கூடுவதற்கும் செயல்படுவதற்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவரது ரசிகர்களும் குடும்ப நண்பர்களும் அதற்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











