சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.. குற்றவாளியை அதிரடியாக கைது செய்த காவல் துறை
மும்பை: திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் சைஃப் அலிகானுக்கு சில நாட்களுக்கு முன்பு நடந்த கத்திக்குத்து சம்பவம். ஆறு இடங்களில் காயப்பட்ட அவர் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நலம் மெல்ல மெல்ல தேறிவருவதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவரான சைஃப் அலிகான் முதலில் அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்திருந்தார். 2004ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்த சைஃப் அடுத்ததாக கரீனா கபூரை காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரது திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மும்பை பாந்த்ராவில் இருக்கும் சொகுசு பங்களாவில் வாழ்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாவில் அசம்பாவிதம்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அதிகாலை வேளையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பங்களாவில் திருடுவதற்காக வந்திருக்கிறார். அதனை கவனித்துவிட்ட காவலாளி அந்த நபரிடம் யார் என்ன என்று விசாரித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் எழுந்த வாக்குவாதம் மிகப்பெரிய சத்தமாக வெடிக்க அதிகாலை 2.30 மணி அளவில் சைஃப் அலிகான் இந்த சத்தத்தை கேட்டு வர; வந்திருக்கும் நபர் திருடன் என்பது உறுதியானது.
கத்திக்குத்து: உடனே அந்த நபரை சைஃப் அலிகான் தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த நபரோ தான் கொண்டு வந்திருந்த கத்தியை கொண்டு சைஃப் அலிகானை சரமாரியாக குத்தினார். இருந்தாலும் சைஃப் அலிகான் அந்த நபரை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் தப்பினர். தன்னால் இனி சமாளிக்க முடியாது என்று தெரிந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த சைஃப் அலிகான் தானே லீலாவதி மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை: மொத்தம் ஆறு இடங்களில் சைஃபுக்கு கத்திக்குத்து விழுந்திருக்கிறது. அதில் கழுத்தும் ஒரு இடம். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நரம்பியல் தொடர்பான அறுவை சிகிச்சை ஒன்றை செய்தார்கள். பிறகு தேவையான சிகிச்சையும் அளித்தார்கள். அவசர சிகிச்சை பிரிவிலிருந்து நார்மல் அறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் அவர். அவரது உடல்நிலை மெல்ல மெல்ல தேறி வருவதாகவும்; விரைவில் பூரண குணமடைந்துவிடுவார் என்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறினார்கள்.
குற்றவாளி கைது: இதற்கிடையே கத்தியால் குத்திய நபரை காவல் துறையினர் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேடிவந்தார்கள். அவர் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் இருக்கும் ஒரு மொபைல் ஷாப்பில் ஹெட் செட் வாங்கும் சிசிடிவி ஃபுட்டேஜுகள் வெளியாகின. இந்நிலையில் அந்த நபரை இன்று காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். மும்பையில் இருக்கும் ஒரு மெட்ரோ கட்டுமான தளத்துக்கு பின் இருக்கும் தொழிலாளர் முகாமில் போலீஸ் நடத்திய சோதனையில் அவர் சிக்கினார். அந்த நபரின் பெயர் விஜய் தாஸ் என்பதும் அவர் மும்பையில் இருக்கும் ஒரு மதுபான கடையில் பணியாற்றிவந்தவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











