போதைப் பொருள் வழக்கில் சம்மன்.. நான் தலைமறைவாகிவிட்டேனா..? பிரபல நடிகை திடீர் விளக்கம்!
சென்னை: போதைப் பொருள் வழக்கில் தலைமறைவாகி விட்டதாக வந்த தகவலை பிரபல நடிகை மறுத்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து, பாலிவுட்டில் போதைப் பொருள் பிரச்னை தலை தூக்கி இருக்கிறது.
பண மோசடி குறித்து சுஷாந்த் சிங் காதலி, ரியா சக்கரவர்த்தியிடம் அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தியது

வாட்ஸ்-அப் உரையாடல்
அப்போது அவருடைய வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்த போது, அவருக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. தனது தம்பி சோவிக் மூலம் ரியா, போதைப் பொருளை வாங்கி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்துள்ளார்.

ரியா கைது
இதையடுத்து ரியா, அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிரண்டா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

சாரா அலி கான்
நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரித்தனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் ராம்பாலின் பார்ட்னரான கேப்ரில்லா டிமெட்ரியாடிஸின் தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சப்னா பாப்பி
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நடிகை சப்னா பாப்பிக்கு (Sapna Pabbi) போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பினர். சப்னா, லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இவர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். சீரியல்களிலும் நடித்து வருகிறார். வெப்சிரீஸ்களிலும் நடித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் டிரைவ் என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார்..

மும்பை வீட்டில்
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி அவர் மும்பை வீட்டில் சம்மனை போலீசார் ஒட்டி இருந்தனர். அவர் ஆஜராகாததால், அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தலைமறைவு வருத்தம்
அதில், தான் இப்போது பெற்றோருடன் இருப்பதற்காக லண்டன் வந்துள்ளதாகவும் எனது வழக்கறிஞர்கள் இந்த விசாரணை தொடர்பான அதிகாரிகளிடம் இதை தெரிவித்து விட்டதாகவும் தான் தலைமறைவாகிவிட்டதாக வந்த செய்தி வருத்தம் அளிப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











