Lockdown Lessons: அன்பை விட பெரியது எதுவுமில்லை.. அதற்கு இன்னும் மதிப்பு இருக்கு.. ஷாருக்கான்!
மும்பை: நோய் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அலுவலகத்தையே மருத்துவமனையாக மாற்றிய ஷாருக்கான் லாக்டவுன் பாடங்கள் என்ற உருக்கமான போஸ்ட்டை பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகரான ஷாருக்கான் இந்த கொரோனா போராட்டத்தில் பெரும் பங்கு வகித்து வருகிறார்.
அக்ஷய் குமார், அமீர்கான், சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் ஆகிய முன்னணி நடிகர்கள் சுயநலமின்றி இந்த நேரத்தில் மக்களுக்காக உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா உதவி
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும அவரது மனைவி கெளரி கான் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்படும் பலருக்கும் அரசின் மூலமாகவும், நேரடியாகவும் உதவி செய்து வருகின்றனர். அவர்களது தொண்டு நிறுவனமான Meer Foundation மூலமாக ஏகப்பட்ட கொரோனா உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்

மருத்துவமனையாக மாறிய அலுவலகம்
மும்பை கார்ப்ரேஷன் அனுமதி உடன் தனது 4 மாடி அலுவலகத்தை அப்படியே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக கடந்த மாதம் மாற்றி தந்திருந்தார் ஷாருக்கான். பிரதமர் நிவாரண நிதி, மாநில நிவாரண நிதி என பலவற்றுக்கும், சினிமா கலைஞர்களின் பசியை போக்கவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.

மகனுடன் பாட்டு
பல இந்திய பிரபலங்கள் இணைந்து கொரோனாவுக்காக நிதி திரட்ட சமீபத்தில் ஐ ஃபார் இந்தியா என்ற நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே நடத்தினர். கடந்த மே 4ம் தேதி நடிகர் ஷாருக்கானும் அதில் பங்கேற்றார். தனது மகன் ஆபிராம் உடன் இணைந்து பாட்டு பாடி நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் லெசன்ஸ்
இந்நிலையில், தற்போது Lockdown Lessons என்ற உருக்கமான பதிவை நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில், "நாம் நமது தேவைக்கு அப்பாற்பட்டு இதுவரை வாழ்ந்து இருக்கிறோம். உண்மையில் அவை நமக்கு அவ்வளவாக தேவைப்படவில்லை. எத்தனை பேர் நம்மை சுற்றி இருந்தாலும், மனதுக்கு நெருக்கமானவர்களை சந்திக்க முடியாமல் போகும் வலியை இந்த லாக்டவுன் உணர்த்தி இருக்கிறது.

கடிகாரத்தை நிறுத்தி விட்டு
கடிகாரத்தை நிறுத்தி விட்டு சில நேரம் அனைத்தையும் யோசித்துப் பார்த்தால், வாழ்க்கை நமக்கு என்ன உண்மையிலேயே தேவை என்பதை அழகாக புரிய வைக்கிறது. வீணாக ஏன் அவரிடம் அப்படி சண்டை போட்டோம் என நினைத்து இப்போது நாம் சிரிக்கலாம். உண்மையில் அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை என்பதும் புரியலாம்.
Recommended Video

அன்பு ஒன்றே
யார் என்ன சொன்னாலும், எல்லாவற்றுக்கும் மேலாக அன்புக்கு உரிய மதிப்பு இன்னும் இந்த உலகில் ஜீவித்துக் கொண்டு தான் இருக்கிறது. என தனது லாக்டவுன் அனுபவங்களை நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். அவரது இந்த உருக்கமான பதிவை பாலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











