கங்கனா ரனாவத் நடிகையாக இருக்கலாம்… ஆனால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
மும்பை : கங்கனா ரனாவத் பிரபலம் என்பதை மேற்கோள் காட்டி, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பாலிவுட்டின் சர்ச்சை நாயகி என்று அழைக்கும் அளவுக்கு அவர் பெயர் எடுத்துள்ளார். 2020ம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி ஜாவேத் கங்கனா மீது அவதூறு வழக்குப்பதிவு செய்திருந்தார்.

இதுதொடர்பான வழக்கு மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதில்,கங்கனா ரனாவத், சினிமாவில் பிரபலமாக இருப்பதால் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், இதனால், இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கங்கனா ரனாவத் ஒரு பிரபல நடிகையாக இருக்கலாம், அவருக்கு பல பணிகள் இருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தை பொறுத்தவரை அவர் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதை மறுக்க முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிரந்தரமாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உரிமை கோர முடியாது. இதுவரை, குற்றம் சாட்டப்பட்டவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்திற்கு ஒத்துழைத்து ஆஜராகவில்லை, குற்றம் சாட்டப்பட்டவர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கங்கனா ரனாவத்தின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர். அனைவருக்கும் நீதி ஒன்றுதான் என்பதை இந்த நீதிபதி நிரூபித்துள்ளதாகவும் பலர் நீதிபதியை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











