அவர் காது கொடுத்து கேட்கவே இல்லை.. ஐஸ்வர்யா ராய் பற்றி முன்னாள் காதலர் ஓபன் டாக்
மும்பை: ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை மிக சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கும் சூழலில் அவர்களுக்கு விவாகரத்து நடக்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே வதந்திகள் பரவின. ஆனால் அதற்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளியை சமீபத்தில் வைத்தார்கள். இந்தச் சூழலில் ஐஸ்வர்யா ராய் குறித்து அவரது முன்னாள் காதலர் விவேக் ஓபராய் பேசியிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு தமிழிலிருந்து பாலிவுட்டுக்கு அவரது கவனம் சென்றது. அங்கு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். அப்படிப்பட்ட சமயத்தில் சல்மான் கானை காதலித்தார் ஐஸ்வர்யா. இருவரும் ஃபேமஸ் ஜோடிகளாக வலம்வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆவார்கள் என்றும் பலரும் கணித்தார்கள்.

பொய்த்து போன கணிப்பு; நடந்தது வேறு: ஆனால் கணிப்பு பொய்யாகி இரண்டு பேரும் பிரிந்தார்கள். அதற்கு முழு காரணம் சல்மான் கான் மட்டும்தான் என்று இன்றுவரை கூறப்படுகிறது. சல்மான் கானை பிரிந்த ஐஸ்வர்யா பிறகு விவேக் ஓபராயை காதலித்தார். இவர்களும் காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்க இந்தக் காதலும் பாதியில் முடிந்தது. தொடர்ந்து இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த ஐஸ்வர்யா ராய் அதற்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்தார்.
அபிஷேக்குடன் திருமணம்: அதனையடுத்து அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயும் திருமணத்துக்கு பிறகு சில காலம் கழித்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
வதந்திக்கு முற்றுப்புள்ளி: இதற்கிடையே அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனால் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும்; அதன் காரணமாக விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. அதற்கு இரண்டு பேரும் அமைதியாக இருந்தார்கள். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேரும் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது. இதன் காரணமாக இந்த வதந்திக்கு பெரிய முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறார்கள்.
விவேக் ஓபராய் பேட்டி: இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் குறித்து அவரது முன்னாள் காதலர் விவேக் ஓபராய் பேசியிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “பிரபலமாக இருப்பது பெரிய கொடுமை. ஏனெனில் உங்கள் காதல் முறிவடைந்துவிட்டால் அந்த செய்தி எங்கும் பரவிவிடும். அந்த உறவிலிருந்து நான் வெகுதூரம் வந்துவிட்டேன். காதல் தோல்வி பற்றி கடவுளிடம் நிறைய கோரிக்கை வைத்தேன். ஆனால் அதை அவர் காது கொடுத்து கேட்கக்கூட மறுத்துவிட்டார்.
மகிழ்ச்சிதான்: இப்போது நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். ஐஸ்வர்யா ராயும் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் நல்ல வாழ்க்கையை கண்டுபிடித்து அதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். உங்களது வாழ்க்கையை விட்டு ஒருவர் வெளியேறினால் அதைப் பற்றி மாற்றி யோசியுங்கள். புதிய துணை நமக்கு கிடைக்கும் என்று நம்ப வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











