60-களில் கொடி கட்டி பறந்தவர்... பழம்பெரும் நடிகை நிம்மி காலமானார்... இன்று மாலை இறுதிச்சடங்கு!
மும்பை: பிரபல நடிகை நிம்மி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.
கடந்த சில நாட்களாக, வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார்.
மும்பையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த அவருக்கு நேற்று உடல் நிலை மேலும் மோசமானது.

தனியார் மருத்துவமனை
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மும்பை ஜுஹூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாலிவுட் பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிராமத்து கேரக்டர்
மறைந்த நிம்மி, 1950 மற்றும் 1960 களில் இந்தி சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். பெரும்பாலும் கிராமத்து பெண் கேரக்டர்களில் நடித்து, ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து இருந்தார். அவரது நடிப்பு பேசப்பட்டதை அடுத்து ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. அவரும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியவர் ராஜ்கபூர்.
திலீப் குமார்
டெல்லியில் பிறந்து வளர்ந்த நிம்மியின் இயற்பெயர் நவாப் பானு. சினிமாவுக்காக நிம்மி என்று பெயரை மாற்றி வைத்தார் ராஜ்கபூர். அந்த பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. ஆன், பர்சாத், தீதர், பாய் பாய், குண்டன் உட்பட பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். அவர் கடையாக நடித்த படம், ஆகாஷ்தீப். பிரபல முன்னாள் இந்தி ஹீரோக்களான ராஜ் கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த், அசோக்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

ரிஷி கபூர் இரங்கல்
இயக்குனர் மற்றும் ரைட்டர் அலி ராஸாவை திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அலி ராஸா கடந்த 2007 ஆம் ஆண்டு மறைந்தார். நிம்மியின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. இதற்கிடையே, முன்னாள் இந்தி ஹீரோ ரிஷி கபூர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நன்றி நிம்மி ஆண்டி. நீங்கள் ரிஷி கபூர் குடும்பத்தில் ஒருவராக இருந்தீர்கள். பர்சாத் உங்கள் முதல் படம். அல்லா, உங்களுக்கு சொர்க்கத்தை வழங்குவாராக' என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் மகேஷ்பட் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











