twitter
    Celebs»Vadivelu»Biography

    வடிவேலு பயோடேட்டா

    வடிவேலு தமிழ் திரைப்பட நடிகரும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.

    அங்கீகாரம்

    இவர் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பிற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதினை ஐந்து முறை காலம் மாறிப் போச்சு (1996), வெற்றிக் கொடி கட்டு (2000), தவசி (2001), இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006), காத்தவராயன் (2008) திரைப்படங்களுக்காகவும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை 2005-ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி திரைப்படத்திற்காகவும் வென்றுள்ளார். ‘மருதமலை', ‘ஆதவன்’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’ வென்றுள்ளார்.

    பிறப்பு

    இவரது பெற்றோர் சரோஜினி அம்மாள் மற்றும் நடராச பிள்ளை ஆவார்கள். இவருக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா,கலைவாணி ஆகியமகள்களும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். திரைப்படங்களில் நடித்த பின்னர் பணம், புகழுடன் வசதியாக வாழ்ந்தாலும், தனது கடந்த காலத்தில் ஏழ்மையோடு போராடியதை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்பிரமணிக்கு சிவகங்கை, திருப்புவனத்தில் ஒரு கூரை வீட்டில் வசிக்கும் ஏழ்மையான பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார்.

    வாழ்கை

    பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றியுள்ளார். அந்த நாடகங்களில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார். இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. மதுரையில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார். அந்தத் தருணத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒருமுறை அவருடைய ஊருக்குச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வடிவேலு, ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார். ராஜ்கிரண், தான் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுவை முதன்முதலாக திரையில் அறிமுகப்படுத்தினார்.

    அறிமுகம்

    1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

    வடிவேலுவின் முதல் படமான என் ராசாவின் மனசிலே(1991) திரைப்படத்தில், இருந்து இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படத்திற்கு முன்னர் வரை, தமிழ்த் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான கவுண்டமணி-செந்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றார்.

    பிரபலம்

    ‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.

    ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடிக்கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.

    கதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மலையில் நனையவைத்தார். கலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை! ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாகி கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியது. குறிப்பாக கதாநாயகர்கள் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்வையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றது எனலாம். மேலும், சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும்.

    காதலன்(1994) திரைப்படம் வெளியான பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் இவரும் ஒரு முக்கியமான நபராக வளர்ந்தார். இவர் நடித்த திரைப்படங்களில் பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடி கட்டு, வின்னர், மருதமலை, மற்றும் சந்திரமுகி போன்றவை குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். இவர் இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய திரைப்படமாக அமைந்தாலும் அதன் பின்னர் வெளியான இந்திரலோகத்தில் நா. அழகப்பன் (2008) திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

    வடிவேலு இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளவர். இவரது நகைச்சுவை காட்சிகளில் பெரும்பாலும் வீண்வம்பு இழுத்து அடிவாங்குபவராகவும், யாரேனும் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்டு அதன்மூலமாக அடிவாங்குபவராகவும், கைதேர்ந்த திருடனாகவும், மக்களின் அறியாமை மற்றும் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுபவராகவும் தோன்றுவார்.

    இவரது நகைச்சுவை வசனங்களான "ஆகா ஒரு குரூப்பாத்தான் அலையிராங்கய்யா", "வந்ததுட்டான்யா வந்ததுட்டான்யா" மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெற்ற "மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு" போன்றவை மிகவும் பிரபலமானவை. இத்தகைய வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இவ்வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் பலராலும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

    நகைச்சுவை வசனங்கள் மட்டுமின்றி அந்த வசனங்களின் உச்சரிப்பு மற்றும் அவரது உடல் மொழி போன்றவை அவரை மற்ற நகைச்சுவை நடிகர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியது. இத்தகைய நடிப்புத் திறமையால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். இவர் இதுவரை 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு.

    என்.எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன், டி.எஸ் பாலையா, வி. கே. ராமசாமி, நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம் எனப் பல நகைச்சுவை நடிகர்களைத் தமிழ் திரைப்படக் களம் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.

    1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்றுப் பின்னணியை கதையாகக் கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.

    திரையுலகை விட்டு இரண்டு ஆண்டு காலம் விலகி இருந்த வடிவேலு,  தெனாலிராமன் என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கினார்.