Ameer: "பருத்திவீரன் பிரச்சினைக்கு அப்புறம் சிவகுமாரை பார்த்தேன்.. அத மறக்கவே மாட்டேன்”: அமீர் ஓபன்!
சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் பருத்திவீரன் பிரச்சினைக்குப் பின்னர் சிவகுமாரை சந்தித்தது குறித்து அமீர் மனம் திறந்துள்ளார்.
சிவக்குமாரை சந்தித்தேன்: அமீரின் பருத்திவீரன் தமிழில் மிக முக்கியமான கல்ட் கிளாஸிக் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்திக்கு, பருத்திவீரன் மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்தது. இதன் மூலம் முதல் படத்திலேயே கார்த்தி முன்னணி ஹீரோவாக வலம் வரத் தொடங்கினார். முன்னதாக அமீர் இயக்குநராக அறிமுகமான மெளனம் பேசியதே படத்தின் ஹீரோவாக சூர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலா இயக்கிய சேது படத்தில் நடித்ததில் இருந்தே அமீர் - சிவகுமார் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் கார்த்தியின் முதல் படத்தை அமீர் இயக்க வேண்டும் என அவர் விரும்பியுள்ளார். அதனடிப்படையில் பருத்திவீரன் தொடங்கும் முன்னரே கார்த்தியின் கையை பிடித்து அமீரிடம் ஒப்படைத்துள்ளார் சிவகுமார். அதேபோல், பருத்திவீரன் தயாரிப்பின் போது ஞானவேல்ராஜாவால் பிரச்சினை வரும் போதும், சிவகுமாருக்காகவே எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுள்ளார் அமீர்.
இந்நிலையில் பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் - ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே இந்தப் பிரச்சினையில் அமீரும் ஞானவேல் ராஜாவும் அவர்கள் தரப்பு நியாயத்தையும் இழப்பையும் பேசி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, ஞானவேல்ராஜாவுக்கு தங்களது கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்னர் மெளனம் பேசியதே வெளியாகி 21 ஆண்டுகள் ஆனதையொட்டி அமீர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில் சூர்யாவுக்கும் அவர் நன்றி கூறியிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதேநேரம் பருத்திவீரன் சர்ச்சையில் இதுவரை சூர்யா, கார்த்தி இருவரும் வாய் திறக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இந்நிலையில் பருத்திவீரன் வெளியாகி ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை தீவிரமான நேரத்தில் சிவகுமாரை சந்தித்துள்ளார் அமீர்.
ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் சிவகுமாரை சந்தித்ததாகவும், அப்போது கூட அவர் பருத்திவீரன் சர்ச்சை பற்றி பேசவில்லை என்றும் அமீர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அதிகபட்சமாக பணம் தான் பிரச்சினையாக இருக்கிறது. அதுகுறித்து சிவகுமாரோ அல்லது யாரோ மனம் திறந்து பேசியிருந்தால் இது எப்போதோ முடிந்திருக்கும். யாருமே பேசவில்லை என்பது தான் எனது வேதனை என அமீர் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











