ரஜினி-மோகன்பாபு கருத்து வேறுபாடு?

திரையுலகில் நீண்ட கால நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம். அந்த வகையில் ரஜினி, மோகன்பாபு நட்பை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் படு அதிசயமாக பார்த்து வந்தது. காரணம், இருவருக்கும் இடையே நிலவிய நெருக்கமான தோழமைதான்.
ஆனால் சமீப காலமாக ரஜினிக்கும், மோகன்பாபுவுக்கும் இடையே பல விஷயங்களில் அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டு விட்டதாம். இது சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த குசேலடு பட பூஜையின் போது வெளிப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி, மோகன்பாபு குறித்து தெரிவித்த கருத்துக்கள், இருவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசலை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இந்த நிலையில், கடந்த 18ம் தேதி சென்னையில் நடந்த பூரி ஜெகன்னாத்தின் புஜ்ஜிகாடு பட ஆடியோ வெளியீட்டின்போது இந்த விரிசல் மேலும் விரிவடைந்திருந்தது தெரிய வந்தது. இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் மோகன்பாபு. ஆனால் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அவர் வரவில்லை. அந்த சமயத்தில் அவர் ஹைதராபாத்தில்தான் இருந்தார்.
அவர் வராதது குறித்து இயக்குநர் பூரி ஜெகன்னாத் கூறுகையில், மோகன்பாபுவால் சில காரணங்களினால் இந்த விழாவுக்கு வர முடியவில்லை. ரஜினியும், மோகன்பாபுவும் நல்ல நண்பர்கள். இருவரையும் சேர்த்து மேடையில் பார்த்திருந்தால் சந்தோஷமாகத்தான் இருந்திருக்கும்.
உண்மையில் ரஜினியை இந்த விழாவுக்கு கூப்பிட வேண்டும் என்று கூறியதே மோகன்பாபுதான். எனவே இருவருக்கும் இடையே பிளவு என்பது வெறும் வதந்திதான் என்றார்.
வதந்தியோ, கிசுகிசுவோ, நட்பு பிரிவது என்பது நிச்சயம் சந்தோஷமான விஷயமில்லை. எனவே ரஜினி - மோகன்பாபு கருத்து வேறுபாடு என்ற செய்தி கிசுகிசுவாகவே முடியட்டும் என்பதே இருவருக்கும் நெருங்கியவர்களின் ஆசை.


Click it and Unblock the Notifications











