கங்கணாவுடன்? சேச்சே.. ஜெயம் ரவி

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி இன்னும் எலிஜிபிள் பேச்சலராக வளைய வந்து கொண்டிருப்பதால் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்களும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன.
சமீபத்தில் மும்பை இதழ் ஒன்றில் ஜெயம் ரவியைப் பற்றிய ஒரு காதல் கிசுகிசு படு சூடாக வெளியாகியிருந்தது. அவருக்கும், தாம் தூம் படத்தின் நாயகி கங்கணாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், படப்பிடிப்பின்போது உருவான இந்தக் காதல் இப்போது படு டைட்டாகி விட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
அப்படியா என்று ஜெயம் ரவியின் அண்ணனும், இயக்குநருமான ஜெயம் ராஜாவிடம் கேட்டால், அதெல்லாம் வதந்தி செய்தி. இப்போதைக்கு ரவியின் முழுக் கவனமும் அவரது தொழில் மீது மட்டுமே உள்ளது. இதுமாதிரியான வேலைகளில் அவருக்கு ஈடுபாடு இல்ைல என்றார்.
ஆனால் மும்பைச் செய்தியோ வேறு மாதிரியாக கூறுகிறது. வார இறுதி நாட்களில் இருவரும் மும்பையில் சந்தித்துக் கொள்கிறார்களாம். ரவி குறித்து கங்கணா அளித்துள்ள பேட்டியில், ரவி என்னுடைய நெருங்கிய நண்பர். நல்ல மனிதர். அவரைக் கட்டிக் கொள்ளப் போகும் எந்தப் பெண்ணுக்கும் அவர் உற்ற தோழனாக, நல்ல கணவனாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
சரி ஜெயம் ரவியிடமே மேட்டரைக் கேட்டு விடலாம் என சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் டப்பிங் வேலைகளில் பிசியாக இருந்தவரை அணுகி விசாரித்தோம். அவரோ, கங்கணா என்னுடன் நடிக்கும் சக நடிகை. அவ்வளவுதான். வேறு எந்தத் தொடர்பும் எங்களுக்குள் இல்லை என்றார்.
முதலில் புகையும், பிறகுதான் கொளுந்து விட்டு தீ எரியும். புகைய ஆரம்பித்துள்ளது. அது தீயாக மாறுமா அல்லது வதந்தியாக உருமாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











