தயாரிப்பாளர் தற்கொலை முயற்சி... அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல தயாரிப்பாளர் அவர்... அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்தவர், தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியைத் தழுவியதால் மனமுடைந்து நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மீடியா ஜாம்பவான் ஒருவர் தலையிட்டு அவரை சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றியுள்ளாராம்.
அந்தத் தயாரிப்பாளர் பற்றிய முழு விபரங்களையும் சூழநிலை கருதி இங்கே தராமல் தவிர்த்துள்ளோம்.
எக்கச்சக்க கதாநாயகிகளுடன் ஒரு ரீமேக் படத்தை எடுத்து வெற்றி கண்ட அந்தத் தயாரிப்பாளர், அடுத்தடுத்து வித்தியாசமான படங்களைத் தந்து தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.
இந்த நேரத்தில்தான் அவருக்கு சோதனையாக அமைந்தது ஒரு படம். பழைய காலிப் பெருங்காய டப்பா இயக்குநரை நம்பி அந்தப் படத்தை எடுத்தார். படு தோல்வி. எக்கச்சக்க நஷ்டம். அடுத்த படம் காப்பி திலகம், சுய தம்பட்டப் புகழ் நடனக்காரரை வைத்து எடுத்தார். புன்னகை இளவரசி இருந்தும் படம் பப்படம்.
மூன்றாவது படம்.... வேண்டாம்... அது எதுக்கு இப்போ!
இதற்கு முன் சந்தித்த இரு தோல்விகளை விட இந்தப் படத்தின் தோல்வி தயாரிப்பாளருக்கு மரண அடியாக அமைந்துவிட்டதாம். பைசா தேறவில்லையாம் இந்தப் படத்தில்.
விளைவு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இத்தனைக்கும் அடுத்தடுத்து 3 பெரிய பட்ஜெட் படங்கள் இவர் தயாரிப்பில் வரிசைகட்டி நிற்கின்றன. ஆனால் பட்டுள்ள கடனோ, இந்த மூன்று படமும் சூப்பர் ஹிட்டாக ஓடினால்கூட அடையாத அளவுக்கு குவிந்துள்ளதாம்.
'சரி... பார்த்துக் கொள்ளலாம்... தைரியமாக இருக்க வேண்டும்' என்று ஆறுதலளித்து காத்திருப்பவர் மீடியா உலக ஜாம்பவான் எனப்படும் அந்தப் பெரும்புள்ளிதானாம். இப்போதைக்கு விஷயம் அமைதியாக்கப்பட்டாலும், விரைவில் வெளிச்சத்துக்கு வரக்கூடும்!.


Click it and Unblock the Notifications











