அரை டவுசரோடு பல் துலக்கியபடி கதை கேட்ட நடிகர் - கோபத்தில் உதவி இயக்குநர் செய்த காரியம்
சென்னை: சுமார் 42 ஆண்டுகள் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொலைத்த உதவி இயக்குநர் ஒருவர் தனது அனுபவங்களை தனியார் ஊடகம் ஒன்றில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
அண்மையில், இவரை ஊடகங்கள் அடையாளங்கண்டு பேட்டி எடுத்ததன் மூலம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியிருக்கிறார்.
கதை சொல்லப் போன இடத்தில் பல்வேறு நடிகர்களிடம் தான் பட்ட அவமானங்கள் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

6 மாதங்கள் இழுத்தடித்த ஆக்சன் நடிகர்
அந்தக் காலக்கட்டத்தில் தன் மனதில் தோன்றிய கதையை ஸ்கிரிப்ட்டாக எழுதி அதனை வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு தேடியிருக்கிறார் அந்த உதவி இயக்குநர். அவர்களில் ஒரு தயாரிப்பாளர் கதையைக் கேட்டுவிட்டு, யாரை நடிக்க வைக்கப் போகிறாய்? எனக் கேட்டிருக்கிறார். ஆக்சனில் பட்டையைக் கிளப்பும் அந்த நடிகரை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் உதவி இயக்குநர். உடனே, அந்த ஆக்சன் நடிகரிடம் கதை சொல்ல இவருக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அத்தயாரிப்பாளர். என்றாலும் கதை சொல்லப் போகும்போதெல்லாம் அந்த நடிகர் அவரை அலட்சியப்படுத்தி கதை கேட்காமல் கிட்டத்தட்ட 6 மாதங்கள் இழுத்தடித்திருக்கிறார். பின்னர் 6 மாதங்கள் கழித்து ஒருநாள் அதே நடிகர், உதவி இயக்குநரைத் தனது வீட்டிற்கு வரச் சொல்லி அவருக்கு டீ, பிஸ்கெட்டெல்லாம் கொடுத்து கதை சொல்லச் சொல்லியிருக்கிறார். என்றாலும், 6 மாதங்கள் தன்னை அலைகழித்ததை எண்ணி கதை சொல்லாமல் தான் திரும்பி விட்டதாக கூறியிருக்கிறார் அந்த உதவி இயக்குநர்.

தென்னிந்திய மைக்கல் ஜாக்சன்
அடுத்ததாக, அந்த காலக்கட்டத்தில் தென்னிந்திய மைக்கல் ஜாக்சன் எனப் பெயரெடுத்த அந்த நடின நடிகரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அவரிடம் கதை சொல்ல சென்றிருக்கிறார் உதவி இயக்குநர். காலை 7 மணிக்கெல்லாம் அவர் வரச் சொல்ல, பரவாயில்லையே காலை 7 மணிக்கு எழுந்து கதை கேட்கிறாரே என்று மிகுந்த மகிழ்ச்சியில் கதை சொல்லப் போயிருக்கிறார். ஆனால் அப்போது தான் தூங்கி எழுந்திருந்த அந்த சுருள்முடி நடிகர், அரை டிரவுசரும், பனியனும் போட்டு கொண்டு, வாயில் டூத் பிரஷை வைத்தபடி, கதை சொல்லும்படி கூறியிருக்கிறார். அதனைப் பார்த்து மிகுந்த வருத்தமடைந்த உதவி இயக்குநர், தான் கதை சொல்ல வரவில்லை.. வாழ்த்து சொல்ல வந்தேன் என மழுப்பியிருக்கிறார். அதற்கு, "நீ என்ன மெண்டலா?" எனக் கேட்டு தன்னை அவமதித்ததாக தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அந்த உதவி இயக்குநர் கூறியிருக்கிறார்.

கதை கேட்டு தூங்கிய தயாரிப்பாளர்
மிகப் பெரிய முன்னணி தயாரிப்பாளர் ஒருவரின் அலுவலகத்திற்குக் கதை சொல்லப் போயிருக்கிறார் அந்த உதவி இயக்குநர். மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அலுவலகத்தைக் கண்டு பிரமித்துப் போயிருக்கிறார். இந்நிலையில், காலையில் போனவர் மதியம் வரையில் அங்கு உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். மதியத்திற்கு மேல் அத்தயாரிப்பாளர் கதை கேட்க வந்திருக்கிறார். என்றாலும், மிக ஆர்வத்தோடும், ஆசையோடு கதை சொல்லியிருக்கிறார். ஆனால் கதை சொல்லிக் கொண்டிருந்த அவருக்குத் தெரியவில்லை, கதைக் கேட்ட 5 நிமிடத்திலேயே தயாரிப்பாளர் தூங்கி விட்டார் என்று. கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற உதவி இயக்குநர் மேசையின் மேல் வைத்திருந்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து அத்தயாரிப்பாளரையே முறைத்துப் பார்த்து கொண்டிருந்ததாக அப்பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால தான் வாய்ப்பு கிடைக்கவில்லை
மூத்த உதவி இயக்குநரின் இப்பேட்டியைப் பார்த்த பொதுமக்கள் பலர், முன்கோபமும், அவரின் பொறுமையில்லாத தலைக்கணமும் தான் அவருக்கு இத்தனை ஆண்டுகளாக வாய்ப்புக் கிடைக்கவில்லை எனக் கருத்துக் கூறியிருக்கின்றனர். 6 மாதங்களுக்குப் பிறகு ஆக்சன் நடிகரிடம் கதை சொல்ல வாய்ப்புக் கிடைத்தும் அவ்வாய்ப்பினைப் பயன்படுத்தாமல் போனது உதவி இயக்குநரின் தவறு தான் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேலும், கதை சொல்வது உங்கள் வேலை, நடிகர்கள் எப்படிப்பட்ட வேலையில் இருந்தாலும், அவர்களை உங்கள் கதை சொல்லும் திறமையால் கவனம் ஈர்த்திருக்க வேண்டும் என்றும் அத்தனியார் ஊடகப் பேட்டியின் கீழ் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்


Click it and Unblock the Notifications











