சினிமாவே வேண்டாம் சாமி: விரக்தியில் நடிகை
சென்னை: திறமையான நடிகை ஒருவர் இனி படங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளாராம்.
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோயின் ஆனவர் அந்த நடிகை. பேரழகி என்றெல்லாம் சொல்ல முடியாது. சுமாரான அழகு என்றாலும் அது ஒரு தனி அழகு. நடிகை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருந்தார்.

அந்த படத்தை பார்த்து நடிகையை பாராட்டாதவர்களே இல்லை. அந்த அளவுக்கு நடித்திருந்தார். கோலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த படத்தை பார்த்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஆனால் அம்மணியோ கதையை கேட்டுவிட்டு எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி பல இயக்குநர்களை திருப்பி அனுப்பினார்.
அவர் தொடர்ந்து பல இயக்குநர்களை திருப்பி அனுப்ப அடப் போம்மா, நீ இல்லாட்டி வேறு ஒரு நடிகை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் இயக்குநர்கள். நடிகை பிரபல இயக்குநர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர் சொல்வதுபடி தான் நடப்பதாகவும் கூறப்பட்டது. நடிகை தன்னை தேடி வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்காமல் இருப்பதற்கும் அந்த இயக்குநர் தான் காரணம் என்று கூறப்பட்டது.
கதை கேட்டு கேட்டு ஓய்ந்து போன நடிகை இனி படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம். அவரின் முடிவால் பல இயக்குநர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு ஹிட் கொடுத்துவிட்டு ஓவராக சீன் போட்டதற்கு நீங்கள் நடிக்காமல் இருப்பதே நலம் என்று அவருக்கு கதை சொல்லி, திரும்பி வந்த இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ, தமிழ் திரையுலகம் ஒரு திறமையான நடிகையை இழக்கிறது. அவர் தனது மனதை மாற்றிக் கொண்டு முக்கியமாக அந்த இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்துவிட்டால் அவரின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











