ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்!
மெரினா நடிகர் மீது இயக்குநர் ஒருவர் கடும் கோபத்தில் உள்ளார்.
சென்னை: தான் அறிமுகப்படுத்திய மெரினா நடிகர் தனது புதிய படத்தில் நடிப்பதற்கு பெரும் தொகையை சம்பளமாகக் கேட்டதால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் குழந்தைகள் படத்தை இயக்கிய இயக்குநர்.
டிவியில் மைக் பிடித்துக் கொண்டிருந்தவரை சினிமாவிற்கு கை பிடித்து அழைத்து வந்தவர் அந்த இயக்குநர். தொடர்ந்து இரண்டு படங்கள் கொடுத்து நடிகரின் திரையுலக வளர்ச்சிக்கு பெரும் உதவி புரிந்தவர்.

ஆனால், தற்போது நடிகரின் நிலையே வேறு. முன்னணி நாயகிகள், இயக்குநர்கள் என தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறார். இதனால் நடிகரின் சம்பளம் ஏகபோகமாக எகிறிக் கிடக்கிறது.
இந்த சூழ்நிலையில் தனது புதிய படத்தில் நடிப்பதற்காக தனது அறிமுக நாயகனை சந்தித்திருக்கிறார் இயக்குநர். இயக்குநரின் படங்கள் அனைத்தும் வெற்றி என்பதால், உடனடியாக ஓகே சொன்ன நடிகர் சம்பளமாக மட்டும் பெரும் தொகையைக் கேட்டுள்ளார். இதனால் இயக்குநருக்கு பெரும் ஷாக்.
அறிமுகப் படுத்திய போது ஆயிரத்தில் சம்பளம் கொடுத்த தன்னிடமே, கோடிகளில் நடிகர் சம்பளம் கேட்கிறாரே என அவர் ஆதங்கப் பட்டுள்ளார். ஆனால், நடிகரோ, 'கைல காசு, வாயில தோசை' என கறாராகச் சொல்லி விட்டாராம்.
இதனால், இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் சந்தித்தால்கூட இருவரும் கைகூட குலுக்கிக் கொள்வதில்லை. சமீபத்திய படவிழா ஒன்றில் இயக்குனரே இறங்கி வந்து கைக்கொடுத்தும் நடிகர் தவிர்த்துவிட்டார்.
இதனால், பார்ப்பவர்கள் அனைவரிடமும் நடிகரை பற்றி வசைபாடி வருகிறார் இயக்குனர். ஆனால், நடிகரோ இது எதையும் கண்டுகொள்ளவில்லை. காரணம் நடிகருக்கு கை நிறைய படங்கள் இருக்கும் அலட்சியம் தான் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











