'ஆடே அறுக்கல... அதுக்குள்ள பங்கு வச்சிட்டாங்களே!' - கே வி ஆனந்த் கடுகடு!

விரைவில் வரவிருக்கும் 'கோ' படத்துக்குப் பிறகு ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் சூர்யா வித்யாசமான பாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட, அந்த வித்தியாசமான வேடம் இதுதான் என்று ஆளாளுக்கு ஒரு யூகத்தை அடித்துவிட்டார்கள்.
குறிப்பாக இணையதளங்களிலும், சில நாளிதழ்களிலும், சூர்யா ஏற்கப்போகும் வேடம் இதுவரை உலக சினிமாவிலேயே இடம்பெறாத ஒன்று என்றும், அவர் ஒட்டிப் பிறந்த 'சயாமீஸ் ட்வின்ஸ்' (தலை ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தை) வேடத்தில் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் செய்தி வந்தது. இப்படியொரு செய்தி பரவ முக்கிய காரணம், படத்தில் பணியாற்றும் முக்கியமான ஒரு 'தொடர்பு பார்ட்டி'தான் என்பது பாவம் ஆனந்துக்கு தெரிய வாய்ப்பில்லை!
தன்னிடம் இதுகுறித்து விசாரித்த நிருபர்களிடமெல்லாம், 'ஆமாங்க... அப்படித்தான்' என்று இவர் சொல்லி வைக்க, கை கால், ஒட்டிப் பிறந்த தலை எல்லாம் வைத்து அவர்களும் செய்தியைப் பரப்பி விட்டனர்.
இதையெல்லாம் படித்து செம டென்ஷனாகிவிட்டார் இயக்குநர் கே வி ஆனந்த்.
அவரிடம் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டோம்.
அவர் கூறுகையில், "சூர்யாவை வைத்து மாற்றான் என்று ஒரு படத்தை இயக்குகிறேன் என்பது மட்டும்தான் உண்மை. அது தொடர்பாக வந்த வேறு எந்த செய்தியிலும் உண்மையில்லை. யார் இதுபோல பரப்புகிறார்கள் என்றும் தெரியவில்லை. இப்போது நான் கோ பட வேலைகளில் பிஸியாக உள்ளேன். மாற்றான் படப்பிடிப்பு கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை.
ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்... இந்தப் படத்தில் சூர்யா 5 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். அவ்வளவுதான். மற்றபடி சயாமீஸ் ட்வின்ஸ் என்பதில் எந்த உண்மையும் இல்லை. இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் இந்தப் படம் குறித்து முடிவான செய்திகளைத் தருவோம்", என்றார்.


Click it and Unblock the Notifications











