எப்போ கல்யாணம்...? கேள்விகளுக்குப் பயந்து அயல்நாட்டுக்கு ஓடிவிட்ட நடிகை
சென்னை: கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் இவர். தமிழில் பிசியாக இருந்தபோதே "சன்" நடிகருடன் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ஒன்றின் மூலம் ஹிந்திக்கு தாவினார்.
துறுதுறு நடிப்பு, துள்ளலான அழகு என திறமைசாலியான நடிகையை இந்தி திரையுலகம் புன்னகையுடன் வரவேற்றது. ஆனால், முதல் படத்தைத் தவிர அங்கு சொல்லிக் கொள்வது போன்ற படங்கள் எதுவும் அமையவில்லை.
நடிகை இந்திப் பட வாய்ப்புக்காக காத்திருந்த காலத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்தது. இதனால் நடிகையின் இடத்தை மற்ற நடிகைகள் ஆக்கிரமித்தனர்.
வடக்கு கை விரித்ததால், மீண்டும் தமிழ்ப் பட வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தார் நடிகை. ஆனால், அக்கா, அண்ணி வேடங்கள் வேண்டுமானால் தருகிறோம் என தயாரிப்பாளர்கள் கறாரா சொல்லி விட்டனர். தன்னை விட மூத்த நடிகைகள் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது, அக்கா, அண்ணி வேடங்களில் நடிப்பதா என மறுத்து விட்டார் நடிகை.
இதற்கிடையே தொடர்ந்து படங்களில் நடிக்காததால் நடிகைக்கு திருமணம் என்ற பேச்சும் கிளம்பியது. இதனால் மனம் வெறுத்துப் போன நடிகை வெளிநாட்டில் சென்று ஓய்வெடுக்கிறாராம். தனது பிறந்தநாளைக் கூட அங்கேயே தான் கொண்டாடினாராம்.
பிறந்தநாளுக்காக இந்தியா வந்தால் எப்போ கல்யாணம் என்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தால் தான் இந்த வெளிநாட்டுப் பயணம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











